தமிழகத்தில் பாஜக பருப்பு வேகாது.. அமித் ஷாவின் தாய்மொழி எது.. ஆர்ப்பாட்டத்தில் எகிறிய தயாநிதி மாறன்!
சென்னை: மத்திய அமைச்சர் அமித் ஷாவின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் எடுபடாது என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
இதற்கு திமுக தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில், தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இது வேறயா? அமித் ஷா மகன் ரூட்டை பிடித்த 'வாரிசு’! கிரிக்கெட்டில் கால் பதித்த நத்தம் விஸ்வநாதன் மகன்!
தயாநிதி மாறன் பேச்சு
அந்தவகையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்து வரும் ஆர்ப்பாட்டத்திற்கு உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து வருகிறார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனும் கலந்துகொண்டுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தயாநிதி மாறன் பேசுகையில், மோடி, அமித் ஷாவுக்கு நான் நன்றி கூற வேண்டும். ஏனென்றால் எங்களின் தமிழ் உணர்வை அடிக்கடி வெளிக்கொண்டு வருகிறீர்கள்.
அமித் ஷாவின் தாய் மொழி எது?
ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது, பாஜக கையில் எடுக்கும் ஒரே ஆயுதம் மதமும், இந்தி திணிப்பும் தான். மோடி மற்றும் அமித் ஷாவின் தாய்மொழி இந்தி இல்லை. குஜராத்தி மொழி தான் அவர்களின் தாய் மொழி. அந்த மொழி மீது பாசமில்லை. ஆட்சி செய்வதற்காக இந்தி திணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்தியில் மருத்துவக் கல்வி
மத்தியப் பிரதேசம் செல்லும் அமித் ஷா, அங்கு இந்தி மொழியில் மருத்துவப் படிப்புகளுக்கான புத்தகங்களை வழங்க போகிறார். இந்தி மொழியில் மருத்துவக் கல்வியை கற்க போகிற மாணவர்களுக்கு, இறுதி ஆண்டு முடிந்த பின் ஆங்கில வழியில் பயின்றதாக சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இந்தியில் மருத்துவம் கற்றால் அவமானம் என்று மறைக்கிறார்கள். இந்தியாவின் தலைசிறந்த மாநிலங்கள் இந்தி பேசாத மாநிலங்கள் தான். ஐஐடியில் இந்தியை கொண்டு வரப் போகிறோம் என்று கூறுகிறார்கள். அது அவர்களால் முடியாது.
அமித் ஷா பருப்பு வேகாது
பேச்சிற்காக அறிவித்துவிட்டு, இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியை திணிக்க பார்க்கிறார்கள். ஆனால் அது நடக்காது. அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் ஏந்திய எதிர்ப்பு கொடி, இப்போது உதயநிதி ஸ்டாலினால் ஏந்தப்பட்டுள்ளது. அடுத்த ரத்தம் தயாராகிவிட்டது. பாஜக மற்றும் அமித் ஷாவின் பருப்பு தமிழ்நாட்டில் வேகாது என்று ஆவேசமாக தெரிவித்தார்.