தமிழரை பிரதமராக்குவோம்.. தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி இலக்கு.. அமித்ஷா பேச்சு.. அப்போ அதிமுக?
சென்னை: வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதியளிப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டுதான் என்கிற போதிலும் அதற்கான பணிகளை இப்போதே தொடங்கிவிட்டது. ஆந்திரா மாநிலத்தில் சட்டசபை தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விசாகப்பட்டினத்தில் அமித்ஷா பொதுக் கூட்டம் நடத்தினார்.
இதை முடித்துக் கொண்டு சென்னைக்கு நேற்று இரவு திரும்பினார். அப்போது திடீரென மின் வெட்டு ஏற்பட்டது. இதனால் பாஜக நிர்வாகிகள் மறியல் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து மின்சார வாரியம் விளக்கம் அளிக்கையில் பலத்த காற்று மழை காரணமாக மின்சாரம் தடைபட்டிருக்கலாம். மற்றபடி இது மின்வெட்டு இல்லை என தெரிவித்தனர்.
எனினும் இந்த சம்பவத்திற்கு பாஜக மூத்த நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் இன்று கோவிலம்பாக்கத்தில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குள்பட்ட பாஜக நிர்வாகிகளை அமித்ஷா சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வெல்ல வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக தென் சென்னையில் பூத் அமைக்கும் பணிகள் 60 சதவீதம் நடந்து முடிந்துவிட்டது. வரும் காலத்தில் ஒரு தமிழனையாவது பிரதமராக்க வேண்டும். இருமுறை பிரதமர் வேட்பாளரை இழந்ததற்கு திமுகதான் காரணம். எனவே தமிழரை பிரதமராக்க உறுதியெடுப்போம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
சேலத்தில் 3 நாள் பயணமாக சென்றுள்ள திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பேசுகையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வதற்கு அச்சாணியாக சேலம் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டுதான் வரவுள்ளது என அலட்சியமாக இருக்கக் கூடாது. இப்போதிலிருந்தே பணிகளை தொடங்க வேண்டும்.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததை அடுத்து நாடாளுமன்றத்திற்கு முன் கூட்டியே தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிடும். எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு செய்த சிறப்பு திட்டங்களை சென்னை வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா பட்டியலிட வேண்டும் என தமிழக மக்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.












Click it and Unblock the Notifications