பெங்களூரு டூ ஜெ. நினைவிடம்..அதிமுக தலைமை அலுவலகம்.. மாஸ் காட்ட தயாராகும் சசிகலா அண்ட் கோ
சென்னை: பெங்களூருவில் இருந்து அடுத்த வாரம் சென்னை வரும் சசிகலா முதலில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அதிமுக தலைமை கழகம் செல்லக் கூடும் என்கின்றன அமமுக வட்டாரங்கள்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டுகாலம் சிறைவாசத்தை நிறைவு செய்துள்ளார் சசிகலா. பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சசிகலா சிறையில் இருந்து விடுதலையானார்.
இப்போது சொகுசு விடுதியில் ஓய்வில் இருக்கும் சசிகலா வரும் 7-ந் தேதி தமிழகம் வருகிறார். பெங்களூரு முதல் சென்னை வரை சசிகலாவை வரவேற்க அதகள ஏற்பாடுகளுடன் அமமுகவினர் தயாராகி வருகின்றனர்.

ஜெ. நினைவிடம் போகும் சசிகலா
சென்னைக்குள் நுழையும் சசிகலா முதலில் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கிருந்துதான் தமிழக அரசியலின் அடுத்த ஆட்டமே தொடங்கப் போகிறது என்கின்றனர் நமட்டு சிரிப்புடன் அமமுகவினர். ஜெயலலிதா நினைவிடத்துக்கு போகும் சசிகலாவுடன் சில அமைச்சர்களும் செல்லலாம் எனவும் தகவல்கள் பறக்கின்றன.

அதிமுக தலைமை அலுவலகம்?
ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்து புறப்படும் சசிகலா, அதிமுக தலைமை கழகம் செல்லக் கூடும் எனவும் கூறப்படுகிறது. அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியது செல்லாது என சசிகலா தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால் தாமே பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சசிகலா செல்ல உரிமை இருக்கிறது என்கின்றனர் அவரது வழக்கறிஞர்கள்.

சசிகலாவுக்கு உரிமை?
அப்படி சசிகலா, அதிமுக தலைமை அலுவலகம் சென்றால் எதிர்ப்புகள் எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்தே அடுத்த நகர்வுகள் அமையலாம். ஏற்கனவே அதிமுகவை மீட்கத்தான் போகிறோம் என்கிறார் தினகரன்.

அதகள ஏற்பாடுகள்
அதிமுக கொடியை பொதுச்செயலாளர் என்கிற வகையில் சசிகலா பயன்படுத்த உரிமை இருக்கிறது என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் சசிகலாவின் பிப்ரவரி 7-ந் தேதி வருகை மூலமாக ஆகக் கூடுமானவரை அதிர்வுகளை ஏற்படுத்தியே தீருவது என்கிற முடிவில் இருக்கின்றனராம் அமமுக நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications