பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் கருத்துகள்.. சிபிஎஸ்இ வருத்தம் தெரிவிக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்
சென்னை: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையிலான பிற்போக்குத்தனமான கருத்துகள் இடம் பெற்றுள்ளதற்குக் கண்டம் தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறுவதைத் தடுக்க சிபிஎஸ்இ நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன்தினம் ஆங்கில தேர்வு நடைபெற்றது.
அதில் குடும்ப ஒழுக்கம் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள சில கேள்விகள் தான் தற்பேது மகிப்ப பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சிபிஎஸ்இ தேர்வு
அதில் கீழ்க்கண்டவற்றைப் படித்து அது குறித்துக் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான பதிலை எழுத வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு, அதற்கான பத்தியும் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் இடம் பெற்றிருந்த கருத்துகள் தான் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதில் இல்வாழ்க்கையில் மனைவிமார்கள் வலுப்பெறுவதினால் பெற்றோர் என்ற கட்டமைப்பு வலுவிழந்து போகிறது என்றும் முன்பெல்லாம் கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடந்த நிலையில் தற்போது அவ்வாறு இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

சர்ச்சை கேள்வி
மேலும், இதனால் அதைப் பார்க்கும் குழந்தைகள் மற்றும் வீட்டுப் பணியாளர்களிடம் ஒழுங்கீனம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. அதில் குழந்தைகளின் ஒழுங்கீனத்திற்கு யார் காரணம்? வீட்டில் ஒழுக்கம் சீர்கெட என்ன காரணம், வீட்டில் குழந்தைகள் பணியாளர்களுக்கான இடம், குழந்தைகள் உளவியல் எனக் கேட்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ அமைப்பின் இந்த கேள்விகள் மிகப் பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பலரும் கண்டனம்
சிபிஎஸ்இ அமைப்பின் இந்த வினாக்கள் பெண் அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக்கக் கூறி இதற்கு நாடு முழுவதும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதற்குக் கண்டம் தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறுவதைத் தடுக்க சிபிஎஸ்இ நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்

டிடிவி தினகரன்
இது தொடர்பாக டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்புத் தேர்வு (CBSE Board Exam) ஆங்கில வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையிலான பிற்போக்குத்தனமான கருத்துகளைக் கொண்ட கேள்வி இடம் பெற்றிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. வளர் இளம் பருவத்தில்(Teenage) இருக்கும் மாணவச் செல்வங்களின் மனதில் எதற்காக இத்தகைய சிந்தனைகளை விதைக்க வேண்டும்?

பெண் குழந்தைகளை இழிவுபடுத்தும் கருத்துகள்
பெண் குழந்தைகளை இழிவுப்படுத்தும் கருத்துகள் வினாத்தாளில் இடம்பெற்றதற்காக சி.பி.எஸ்.இ வருத்தம் தெரிவிக்க வேண்டும். மேலும் சி.பி.எஸ்.இ பாடப்புத்தகங்கள் மற்றும் வினாத்தாள்களில் அடிக்கடி இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெறுவதைத் தடுக்க அதன் நிர்வாகம் உரிய ஏற்பாடுகளை பொறுப்போடு செய்திட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications