இஸ்லாம் என் மதம், தமிழ் என் தாய்மொழி.. கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்..! டிடிவி தினகரன் புகழஞ்சலி
சென்னை: சுதந்திர போராட்ட வீரரான காயிதே மில்லத் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரரான காயிதே மில்லத் அவர்கள், தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய, இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

தமிழகத்தின் மதிப்பு மிக்க தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த காயிதே மில்லத் அவர்களின் நினைவாக, கடந்த 1983ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர், காயிதே மில்லத்தின் வாழ்க்கை குறிப்புகளை 5ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம் பெற செய்தார்.
அதே போன்று, கடந்த 2003ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தான் தமிழக அரசு சார்பாக, சென்னை அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் மகளிர் கல்லூரி வளாகத்தில், காயிதே மில்லத் அவர்களுக்கு மணிமண்டபம் நிறுவப்பட்டது . தூய்மையான அரசியலை முன்னெடுத்த அவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என அழைக்கப்படுகிறார்.
இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"இஸ்லாம் என் மதம், தமிழ் என் தாய்மொழி என பிரகடனப்படுத்தி, மத நல்லிணக்கத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள் இன்று.
அரசியலிலும், தான் சார்ந்த இயக்கத்திலும் நேர்மையுடனும், துணிவுடனும் இயங்கிய மாமனிதர் காயிதே மில்லத் அவர்களின் தன்னலமற்ற தூய்மையான அரசியல் செயல்பாடுகளை எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications