திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற..துரோக கூட்டத்திற்கு தகுந்த பாடம் புகட்ட..அழைப்பு விடுக்கிறார் டிடிவி!
சென்னை: மக்கள் விரோத திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றிடவும் சுயநலமிக்க துரோக கூட்டத்திற்கு தகுந்த பாடம் புகட்டிடவும் டிசம்பர் 5ஆம் தேதி இதயதெய்வம் அம்மா அவர்களின் நினைவிடத்தில் நாம் அனைவரும் ஒன்று கூடி உறுதியேற்க வேண்டுமென ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"
"கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி" என்ற வள்ளுவப் பெருந்தகையாரின் வாக்கிற்கு ஏற்ப ஏழை, எளிய மக்கள் இன்புற்று வாழ ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி, நலிவுற்ற குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து செங்கோல் ஆட்சியை செம்மையாகவும், சிறப்பாகவும் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தலைவி நம் இதயதெய்வம் அம்மா அவர்கள்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் வகுத்துக் கொடுத்த அடிப்படைத் தத்துவங்கள், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் மனிதநேய நெறிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய நம் இதயதெய்வம் அம்மா அவர்களின் நினைவுதினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
"அன்பு காட்டுவோருக்கு அரவணைக்கும் தாயாக", "அழிக்க நினைப்போருக்கு அக்கினிப் பிழம்பாக", "வரலாற்றை வாசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் வரலாறாய்" வாழ்ந்து காட்டிய நம் இதயதெய்வம் அம்மா அவர்களின் புகழையும் கொள்கைகளையும், லட்சியத்தையும் மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களாம் நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.
ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளைகள், குற்றச்சம்பவங்கள், கூலிப்படை பெண்களுக்கு எதிரான அராஜகங்கள்,பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப்புழக்கம் என தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்திருக்கிறது.
விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அடியோடு அழிக்கும் திட்டங்கள், இளைஞர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம், பலமுறை உயர்த்தப்பட்ட பால் மற்றும் பால்பொருட்களின் விலை, பன்மடங்கு அதிகரிக்கப்பட்ட மின் கட்டணம், பத்திரப்பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் வரி, நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு என அனைத்து விதமான வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்திய மக்கள் விரோத திமுக அரசால் பொதுமக்களும், தொழில்துறையினரும் கடும் இன்னல்களுக்குள்ளாகி வருகின்றனர்.
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும், 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் என தேர்தலுக்கு முன்பாக திமுக அளித்த எந்தவித வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாத காரணத்தினால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் வீதிக்கு வந்து போராடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே கட்சி திமுக தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில் அரசு நிர்வாகத்தின் அனைத்து துறைகளிலும் அடி மட்டத்தில் தொடங்கி உயர்மட்டம் வரை எழுந்திருக்கும் ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
பெண் சிசுக் கொலையை தடுக்கும் தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், ஏழைகளின் பசியை போக்கும் அம்மா உணவகம், தாலிக்குத் தங்கம், மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, விலையில்லா சைக்கிள், விலையில்லா அரிசி, மகளிர் காவல்நிலையம், மகளிர் சுய உதவிக்குழுக்கள், என மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட நலத்திட்டங்களை திட்டமிட்டு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வதையுமே முடக்குவதையும், வாடிக்கையாக கொண்டிருக்கும் திமுக அரசுக்கு முடிவுரை எழுத தமிழக மக்கள் அனைவரும் தயாராகி விட்டனர்.
ஆட்சியிலிருக்கும் கட்சியே மீண்டும் ஆட்சியமைத்து வரலாறு படைக்கும் அளவிற்கு மக்களின் செல்வாக்கை பெற்றிருந்த இயக்கத்தை; இந்திய திருநாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாக இதயதெய்வம் அம்மா அவர்களால் சாதனை சிகரத்தில் அமர வைக்கப்பட்ட இயக்கத்தை, ஒரு சிலர் தங்களின் சுயநலத்திற்காகவும், சுயலாப வியாபார நோக்கத்துடன் மட்டுமே பயன்படுத்தி வருவதாலும், ஆளுங்கட்சியின் வெற்றிக்கு மறைமுகமாக துணைபோவதாலும், மக்கள் நலனையும் மறந்து ஆளுங்கட்சியின் கைப்பாவையாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாலும் மக்கள் அளித்த தண்டனைதான் இதயதெய்வம் அம்மா அவர்களின் மறைவிற்குப் பிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தொடங்கி அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வரையிலான தொடர் தோல்விகள்.
"தமிழகமே எனது குடும்பம்..தமிழக மக்களின் நலனே எனது நலன்" என்ற உயர்ந்த லட்சியம் கொண்டிருந்த இதயதெய்வம் அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கம், சுயநலத்தை மட்டுமே அடிப்படை குணமாகக் கொண்டிருக்கும் ஒரு சிலரின் துரோக சிந்தனையாலும், தன்னலத்தாலும் புரட்சித்தலைவர் அவர்களால் தொடங்கப்பட்ட இயக்கத்தின் நோக்கமே திசைமாறி சென்று கொண்டிருக்கிறது.
ஆகவே, மக்கள் விரோத திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றிடவும் சுயநலமிக்க துரோக கூட்டத்திற்கு தகுந்த பாடம் புகட்டிடவும் டிசம்பர் 5ஆம் தேதி இதயதெய்வம் அம்மா அவர்களின் நினைவிடத்தில் நாம் அனைவரும் ஒன்று கூடி உறுதியேற்றிடுவோம். தோல்விகளைக் கண்டு துவளாமல் வெற்றி என்ற ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு இரும்புப் பெண்மணியாக செயல்பட்ட நம் இதயதெய்வம் அம்மா அவர்களின் வழித்தடத்தை பின்பற்றி அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் நம் கழகத்தின் வெற்றி முத்திரையை பதித்திடுவோம்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications