இரட்டை இலை மட்டும் வெற்றிக்கு போதாது.. ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? டிடிவி தினகரன் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக நிலைப்பாடு பற்றி டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற கேள்விக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இருந்து விலகியது ஏன் என்று விளக்கமளித்துள்ள டிடிவி தினகரன், நாடாளுமன்றத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக காலமானார். இதனைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு பிப்.27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்பின்னர் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன், தேமுதிக சார்பாக ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அமமுக சார்பாக சிவ பிரசாந்த் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்.

டிடிவி தினகரன் பேட்டி
இதனிடையே திடீரென ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக-வுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யாததால், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும். அப்போது குக்கர் சின்னம் வழங்கப்படுவதிலும் எந்த தடையும் இல்லை. நாங்கள் ஏற்கனவே குக்கர் சின்னம், பரிசுப்பெட்டி சின்னம் ஆகியவற்றில் போட்டியிட்டுள்ளோம். விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தலில் நிற்காததற்கு என்ன காரணமோ, அதேதான் ஈரோடு கிழக்கில் நிற்காததற்கும் காரணம் என்று தெரிவித்தார்.

அமமுக கூட்டணி?
தொடர்ந்து வாபஸ் வாங்கியதற்கான காரணம் பற்றிய கேள்விக்கு, எங்களிடம் யாரும் பேசவில்லை. என்னிடம் யாரும் பேசி அமமுக வேட்பாளரை வாபஸ் பெற வைக்கவில்லை என்று பதிலளித்தார். தொடர்ந்து, அமமுக எந்தக் கூட்டணியிலும் இல்லை. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் தனித்தே நின்றிருக்கிறோம். நாங்கள் ஒரே கட்சியாக இணைய வேண்டும் என்று சொல்லவில்லை. ஒரே அணியில் மட்டுமே இணைய வேண்டும் என்று கூறி வருகிறேன் என்று தெரிவித்தார்.

இரட்டை இலை
தொடர்ந்து இரட்டை இலை பற்றிய கேள்விக்கு, இரட்டை இலை சின்னம் தவறானவர்கள், தீயவர்கள் கைகளில் இருக்கிறது. அந்த இரட்டை இலை சின்னத்தை வைத்துக் கொண்டு தொண்டர்களை ஏமாற்றி வருகிறார்கள். நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி அணிக்கே இரட்டை இலை சின்னத்தை கொடுத்திருந்தாலும், இரட்டை இலை சக்தி குறைந்திருக்கிறது. அந்த சின்னம் மூலமாக வெற்றிபெற முடியாது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கே இருக்காது என்று விமர்சித்தார்.

யாருக்கு ஆதரவு?
பின்னர் அமமுக ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கு, திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அமமுக போட்டியிட களமிறங்கியது. வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையை விடவும், நல்ல வாக்கு சதவிகிதத்தை பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் சின்னம் கொடுக்காததால் போட்டியிடவில்லை. அதனால் நாங்கள் திமுகவையும் ஆதரிக்கவில்லை. தீய சக்திகளையும், துரோக சக்திகளையும் ஆதரிக்க மாட்டோம். அதுவே எங்கள் நிலைப்பாடு. அமமுக தொண்டர்களுக்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தெரியும். எங்கள் ஆதரவு யாருக்கும் இல்லை என்று கூறினார்.












Click it and Unblock the Notifications