ஆவடியில் வயதான தம்பதி அடித்துக் கொலை.. 11 மாதங்களுக்கு பின்பு சிக்கிய ஆந்திர தம்பதி.. பரபரப்பு தகவல்
Recommended Video
சென்னை: சென்னையை அடுத்த ஆவடி அருகே வயதான தம்பதி 11 மாதங்களுக்கு முன்பு அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பண்ணை வீட்டில் வேலை செய்த ஆந்திர கணவன் மனைவியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஆவடி அடுத்த ஐயப்பன் நகர் சேக்காடு பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் வயது 67 . இவரது மனைவி சுகுமாரி (65). இவர்களுக்கு பிரையேஷ்குமார், கார்த்திக் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். கார்த்திக் வெளி நாட்டில் வசித்து வருகிறார் பிரையேஷ்குமார் சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெகதீசன் தனது மனைவி சுகுமாரியை பிரிந்து சென்று அவருடன் அரசு அச்சகத்தில் பணிபுரிந்த விலாசினி (58) என்பவரை கல்யாணம் செய்து தனியாக ஆவடி அருகே உள்ள பண்ணை வீட்டில் வசித்தார்.

உதவியாக வந்த சுரேஷ்
இந்த தம்பதி தங்களுக்கு உதவியாக பண்ணையை பராமரிப்பதற்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரை நியமித்தனர். கல்யாணம் ஆனவரான சுரேஷை பண்ணையிலேயே வீடு கட்டிக்கொடுத்து அங்கேயே குடியிருக்குமாறு செய்து தோட்டத்தை பராமரித்து வந்தார் ஜெகதீசன்.

மனைவியுடன் தப்பிய சுரேஷ்
இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 27-ந் தேதி சந்திரசேகர் என்பவர் ஜெகதீசனின் தோட்டத்திற்கு வந்துள்ளார். அவர் அங்கு ஜெகதீசன் மற்றும் அவரது மனைவி தலையில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்த ஆந்திராவை சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது மனைவி இருவரும் வீட்டை விட்டு தப்பி சென்றுவிட்டதையும் அறிந்தார்.

விசாரணையில் கண்டுபிடிப்பு
பின்னர் சந்திரசேகர் இது குறித்து ஆவடி காமராஜர் நகரில் வசிக்கும் ஜெகதீசனின் தம்பி கோபிநாத்திடம் சொல்லியிருக்கிறார். அவர் உடனடியாக ஆவடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நட்த்திய நிலையில், 3 அடி நீளமுள்ள இரும்பு குழாயால் வயதான தம்பதி அடித்துக்கொல்லப்பட்டதை கண்டுபிடித்தனர். அங்கு இரும்பு கம்பியை கண்டுபிடித்தனர்.

கொலையாளிகளுக்கு வலை
இச்சம்பவம் குறித்து ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளியை தீவிரமாக தேடினர். கொலையாளிகளைத பிடிக்க துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவின் பேரில், ஆவடி சரக போலீஸ் உதவி கமிஷனர் ஜான் சுந்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது.

மறுவேடத்தில் சென்ற போலீஸ்
ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் கடந்த 2-ந் தேதி ஆந்திரா சென்றனர். அங்கு சுரேஷ் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். அங்கு போலீசார் சில செல்போன் எண்களை கண்டுபிடித்தனர். அதை வைத்து போலீசார் தொடர்பு கொண்ட போது அப்போது அதில் பேசிய நபர் தான் ஹரித்துவாரில் ஆட்டோ ஓட்டுவதாகவும், அப்போது சுரேஷ் என்பவர் தன்னுடைய போனை வாங்கி பேசியதாகவும் போலீசாரிடம் அந்த நபர் தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து தனிப்படை போலீசார் மாறு வேடத்தில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு சென்றனர். அங்கு சாலையில் ஆட்டோவை ஓட்டி சென்ற சுரேசை கண்டுபிடித்து பிடித்தனர்.

ஆட்டோ ஓட்டிய சுரேஷ்
இதையடுத்து தனிப்படை போலீசார் சுரேசை நேற்று முன்தினம் காலை கைது செய்தனர். சுரேஷ் ஹரித்துவாரில் வாடகை வீட்டில் மனைவி மகனுடன் தங்கி வசித்து வந்திருக்கிறார் ஆட்டோ ஓட்டி வந்துள்ளர். இதையடுத்து சுரேஷ் மற்றும் அவரது மனைவியை கைது செய்து அங்கிருந்து விமானம் மூலம் நேற்று அதிகாலை சென்னைக்கு அழைத்து வந்தனர்.

நகைகள் கொள்ளையடிப்பு
தொடர்ந்து சுரேஷிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த ஜெகதீசன் சுரேசிடம் தகராறு செய்து வீட்டை காலி செய்ய சொன்னதாகவும், இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் அங்கிருந்த இரும்பு குழாயால் ஜெகதீசன், விலாசினி ஆகிய இருவரையும் கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்ததாகவும் கூறியிருக்கிறார்.

11 மாதத்திற்கு பின் கைது
கொலை செய்த அன்று சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் சென்று ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆந்திராவுக்கு தப்பி சென்று இருக்கிறார் சுரேஷ். ஆனால் போலீசார் தன்னை தேடுவதை அறிந்து செல்போனை பயன்படுத்தாமல் டெல்லி, காசி, ஐதராபாத், ஆந்திரா, நெல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாறி மாறி வசித்து வந்திருக்கிறார்.
11 மாதங்களுக்கு பின்னர் செல்போனில் பேசியதை வைத்து தனிப்படை போலீசார் கொலையாளியை பிடித்து உள்ளார்கள்.

பிரபல கொள்ளைக்காரன்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 20-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் சுரேஷ் மீது இருப்பதும் , விசாகப்பட்டினம் போலீசார் வழக்கு ஒன்றில் சுரேஷை கைது செய்து நீதிமன்றம் அழைத்து செல்லும்போது போலீசாரை தாக்கிவிட்டு அங்கிருந்து மனைவி மகனுடன் தலைமறைவாகி சுரேஷ் சென்னை ஆவடிக்கு வந்து தங்கியிருந்து தம்பதியை கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

ஆந்திர தம்பதி சிறையில்
விசாரணைக்கு பின்னர் ஆவடி போலீசார் சுரேஷ்குமார் (28) மற்றும் அவரது மனைவி பூவலட்சுமி (22) ஆகிய இருவரையும் வழக்கு பதிவு செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவர்களது மகன் சதீஷ் (3) சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications