ஆன்லைன் சூதாட்டத்தில் பறிபோன பல லட்சம்.. கடனை அடைக்க இன்ஜினியர் போட்ட "அந்த" பிளான்.. பரிதாபம்!
சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளி ஆன இன்ஜினியர் ஒருவர் தனது கடனை அடைக்க செயின் பறிப்பில் ஈடுபட்டு போலீஸில் சிக்கியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதலில் போட்ட பணம் இரட்டிப்பாக வருவதால் பலரும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் இறங்குகின்றனர்.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல நாம் செலுத்தும் பணம் திரும்ப வராது. ஆனால் இழந்த பணத்தை திருப்பி எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் மேலும் மேலும் பணத்தை செலுத்தி கடைசியில் ஒன்றும் இல்லாமல் போனவர்கள் பலர்.
ஓ மை காட்.. தனியார் நிறுவனத்தில் திருடி ரூ.15 கோடியை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த கணக்காளர்! எப்படி?
வாழ்க்கையை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டம்
இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தங்கள் வாழ்நாள் சேமிப்பை எல்லாம் இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டனர். லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பல பேர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டும் வருகின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், பொறியில் படிப்பை முடித்து கவுரவமான வேலையில் இருந்த இளைஞர், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்போது செயின் பறிப்பில் ஈடுபடும் நிலைக்கு வந்திருக்கிறார்.
செயின் பறிப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இவர் சென்னை அஸ்தினாபுரத்தில் உள்ள தனது மகளின் வீட்டுக்கு அண்மையில் வந்தார். இதனிடையே, நேற்று மேற்கு மாம்பலம் கிரி தெரு வழியாக தமிழ்ச்செல்வி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்களில் வந்த இளைஞர், கண்ணிமைக்கும் நேரத்தில் தமிழ்ச்செல்வி அணிந்திருந்த கவரிங் செயினை பறித்துக் கொண்டு சென்றார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரட்டிச் சென்று அந்த நபரை பிடித்து நையப்புடைத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
இன்ஜினியர்
அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சேர்ந்த சரவணன் (28) என்பதும், சிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.35 ஆயிரம் சம்பளத்துக்கு வேலை செய்து வருவதும் தெரியவந்தது. கடந்த ஓராண்டாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட சரவணன், தன்னிடம் உள்ள 3 லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.
கடனை அடைக்க விபரீத திட்டம்
பின்னர் இழந்த பணத்தை மீட்க நண்பர்களிடம் 4 லட்சம் ரூபாய் கடன் வாங்கி மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்தை ஆடியுள்ளார். ஆனால் அந்த பணமும் பறிபோனது. இதனிடையே, கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு நண்பர்கள் அவருக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் செய்வதறியாமல் இருந்த சரவணன், செயின் பறிப்பில் ஈடுபட்டு கடனை அடைத்து விடலாம் என திட்டம் போட்டு தமிழ்ச்செல்வியிடம் இருந்து நகையை பறித்துள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் சரவணனை போலீஸார் கைது செய்தனர்.