நான் ஆர்மி ஆபிசர் சார்..வீடு வாடகைக்கு விடுபவர்களே உஷார்! புது டெக்னிக்கில் ஆட்டைய போடும் கும்பல்!
சென்னை: சமூக வலைதளங்கள் மூலம் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது வீடுகளை வாடகைக்கு விடுவோர்களை குறி வைத்து புதிய முறையில் மோசடி செய்து லட்சக்கணக்கில் பணத்தை திருடி வருகின்றனர் ஆன்லைன் கொள்ளையர்கள்.. ராணுவ வீரர்கள் எனக் கூறி ஐடி கார்டுகளையும் வைத்து நடைபெற்று வருகிறது இந்த மோசடி..
கடந்த காலங்களில் வங்கியில் நீண்ட வரிசையில் நின்று பணம் செலுத்தி பணம் எடுத்த போது அரங்கேறாத பல மோசடிகள் தற்போது ஆன்லைன் யுகத்தில் நாளுக்கு நாள் நிகழ்ந்து வருகிறது.

ஏடிஎம் கார்டு செயலிழந்து விட்டது என பேங்க் ஆஃபீஸர் போல் பேசி பணத்தை திருடுவது, போலியான இணையதள முகவரிகளை கொடுத்து ஆஃபர் என பணத்தை திருடுவது என்ற வரிசையில் தற்போது வீடுகளை வாடகைக்கு விடுபவர்களை குறி வைத்து மோசடி நடைபெற்று வருகிறது.
புதுவித மோசடி: முதலில் வீடுகளை வாடகைக்கு விடுபவர்கள் தங்கள் வீடுகளில் 'டூ லெட்' போர்டுகளை வைத்திருப்பார்கள் வீடு தேடுவோர் அதனைப் பார்த்து தங்களுக்கு வீடு தேவை எனில் பயன்படுத்தி கொள்வார்கள். தற்போது ஆன்லைன் யுகத்தில் ஓஎல்எக்ஸ், நோ ப்ரோக்கர், 99 ஏக்கர்ஸ் உள்ளிட்ட பல்வேறு இணையதளங்கள் வாடகைக்கு வீடுகளை விடுபவர்களையும், வீடு தேடுபவர்களையும் ஒரு இணையதளத்தின் கீழ் கொண்டு வந்து சேவை புரிந்து வருகிறது. இதற்காக குறிப்பிட்ட கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
வீட்டு வாடகை மோசடி: இந்த நிலையில் இந்த இணையதளங்களை வைத்து மோசடியில் ஈடுபட்டு வருகிறது மர்ம கும்பல். குறிப்பாக வயதானவர்கள் தான் இவர்களின் முக்கிய குறியே. அப்படி ஒரு மோசடியில் சிக்கி ஒரு லட்சம் ரூபாயை இழந்திருக்கிறார் முதியவர் ஒருவர். தங்களுடைய வீடு வாடகைக்கு www. http://99Acres.com மூலமாக விளம்பரம் கொடுத்துள்ளார். இதனைப் பார்த்த சிவ சங்கர திவாரி என்ற பெயரில், இந்திய விமானப்படையில் வேலை செய்வதாகவும் சென்னை தாம்பரத்திற்கு மாற்றலாகி வருகிறேன், வீடு வாடகைக்கு வேண்டும் என பேசியுள்ளான் மோசடி பேர்வழி.
ராணுவ வீரர்: மேலும் உடனடியாக மாற வேண்டும் நேரில் வந்து வீட்டை பார்க்க இயலாது என்று சொல்லி ஒரு தொலைபேசி எண்ணிலிருந்து வீட்டை வாடகைக்கு விடுபவரின் மாமனாருக்கு அழைப்பு வந்துள்ளது. பின்னர் மற்றொரு எண்ணிலிருந்து ஆதார், இராணுவ அடையாள அட்டை உள்ளிட்டவற்றையும் இணைத்து அனுப்பியுள்ளான். இதனை நம்பிய அந்த முதியவர் தனது வீட்டின் புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார். தனக்கு வீடு பிடித்துள்ளது. உடனே குடிவருகிறேன். எனவே தற்போது அட்வான்ஸ் தருகிறேன் என அரைகுறை ஆங்கிலம் கலந்த தமிழில் பேசியுள்ளான்.
ஒரு லட்சம் அபேஸ்: இதனையும் நம்பி அவர் வீட்டுக்கு அட்வான்ஸ் பணம் அனுப்புவதாக சொல்லி GPAY Account number வாங்கியுள்ளான். முதலில் நான் ரூபாய் அனுப்புகிறேன்.. ஆனால் அக்கவுண்டை சரிபார்க்க 100 ரூபாயை எனக்கு அனுப்புங்கள் என சொல்லியுள்ளான். அவரும் பணம் அனுப்ப அவர்களுடைய ஜி பே மூலம் 1 லட்சம் ரூபாய் பணத்தை லாகவமாக எடுத்து விட்டான். அதன் பின்பு பலமுறை தொலைபேசியில் அழைத்தும் அவர்களுடைய அழைப்பை அவன் எடுக்கவில்லை.. இதனையடுத்தே தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.

போலீசார் எச்சரிக்கை: இப்படியாக நாளுக்கு நாள் மோசடிகள் அரங்கேறி வரும் நிலையில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர் போலீசார். வீடுகளை வாடகைக்கு எடுக்க விரும்புபவர்கள் தொலைபேசியில் பேசும்போது நேரில் வந்து பார்த்துக் கொள்ளுங்கள் என பேசி அழைப்பை துண்டித்து விடுவது நல்லது எனவும், ஆன்லைன் மூலம் அட்வான்ஸ் பெறுவதையும் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை தருவதையும் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கின்றனர். மோசடிகளில் சிக்கி தவிப்பதை தவிர்க்க பொதுமக்களே கவனமுடன் இருப்பது தான் இது போன்ற மோசடிகளை தவிர்க்க வழி எனவும் அறிவுறுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications