"இதெல்லாம் ஒரு முதலீடா?.." லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ஆனந்த் சீனிவாசன்.. நீங்க போய் மாட்டிக்காதீங்க
சென்னை: நம்ம ஊரில் பெரும்பாலான மக்களுக்குச் சொந்தமாக வீட்டை வாங்க வேண்டும் என்பதை ஒரு ஆசையாகவும் கனவாகவும் இருக்கும். சிலர் வீட்டை முதலீடாகக் கூட கருதுவார்கள். இதற்காகக் கடனை வாங்கியும் வீடு வாங்குவார்கள். ஆனால், வீட்டை ஏன் முதலீடாகக் கருதக்கூடாது.. இதில் என்னவெல்லாம் சிக்கல் இருக்கிறது என்பதை ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
சொந்தமாக ஒரு வீடு என்பது நமது ஊரில் எல்லாருக்குமே இருக்கும் ஒரு கனவு. எப்படியாவது சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதற்காகவே பலரும் இங்கு ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இப்போதிருக்கும் பொருளாதார சூழலில் சொந்த வீடு வாங்குவதில் ரிஸ்க் அதிகம் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். அது பெரிய கடன் வலையில் நம்மைச் சிக்க வைக்கும் என்பது அவர்கள் வாதம்.

ஆனந்த் சீனிவாசன்
இன்னும் சிலர் முதலீடாக நாம் வீட்டை வாங்கலாம் என்றும் சொல்வார்கள். பெரும்பாலும் நாம் ரியல் எஸ்டேட் ஏஜெண்டிடம் பேசும்போது அவர்கள் முதலீடு என்று சொல்லியே வீட்டை விற்கப் பார்ப்பார்கள். இது தொடர்பாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது யூடியூப் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் இப்போது வீடு என்பதை முதலீடாகக் கருதச் சரியான விஷயம் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
அதேபோல இப்போது சென்னை ஓஎம்ஆர், ஈசிஆர் சாலைகளில் உள்ள வீடுகளில் 11% வருமானம் நிச்சயம் வரும் வருமானம் என்றெல்லாம் போர்ட் வைக்கிறார்கள். இது குறித்து ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், "அவர்கள் போட்டால்.. அந்தளவுக்கு வருமானம் வந்துவிடுமா! அது ஒரு தனியார் நிறுவனம்.. பணம் வாங்க இதுபோல சொல்வார்கள். வீட்டை வாங்கினால் வாடகையை நான் மேனேஜ் செய்கிறேன் என்பார்கள். 3 வருடம் செய்வார்கள்.. 4 வருடம் செய்வார்கள். ஆனால், அதன் பிறகு நமது கையிலேயே கொடுத்துவிட்டுப் போய்விடுவார்கள்.
ஒன்னும் நடக்காது
அந்த வீடு மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை வாடகைக்குப் போகும் என அவர்கள் சொல்லலாம். ஆனால், அதை உறுதி செய்ய முடியுமா? நான் கூட எனது வீடு ரூ.3 லட்சத்திற்கு வாடகைக்குப் போகும் எனச் சொல்வேன்.. ஆனால், ஆள் வேண்டுமே.! அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டு கையில் கொடுக்கட்டும்.. ரியல் எஸ்டேட் ஒரு கடன் பத்திரம் மாதிரி தான். வாடகை நமக்கு வரும் வட்டி போல!
பெரிய வருமானம் இருக்காது
ஒரு நிறுவனத்தின் கடன் பத்திரத்தை 10 ஆண்டுகளுக்கு 8% சதவீதத்தில் வாங்கினால் மாதாமாதம் 8% வட்டி கிடைத்துவிடும். அதுபோல ஒரு வாடகை ஒப்பந்தத்தை அவர்களால் இந்த 11% கொடுக்க முடியுமா.. அப்படிக் கொடுத்தால் ஒப்புக் கொள்கிறேன். போய்விடும், வந்திடும் எனச் சொல்வதில் எல்லாம் பயன் இல்லை. ரியல் எஸ்டேட் விலை எல்லாமே இங்கு ஊகத்தின் அடிப்படையிலேயே இருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கே சிக்கல் ஏற்படுத்தும் அளவுக்கு இருக்கிறது.
இதெல்லாம் ஒரு முதலீடா?
மேலும், வீட்டை விற்பது கூட ஈஸி இல்லை. பல இடங்களில் 6 மாதம், ஒரு வருடம் கூட வீட்டை விற்க முடியாமல் இருக்கிறார்கள். அதேநேரம் பங்குகள், கடன் பத்திரம் ஆகியவற்றை விற்றால் 2 நாளில் பணம் வந்துவிடும். அதுதான் முதலீடு.! அதிலும் ரிசர்வ் வங்கியின் கடன் பத்திரம் வைத்திருந்தால் எங்கு வேண்டுமானாலும் விற்கலாம்.. அதிலேயே 7- 7.5% வரை வருமானம் கிடைக்கும்.
வீட்டை வாங்கி வாடகைக்கு விட்டால் 2% கூட வராது. அதாவது சேமிப்பு கணக்கிற்கான வட்டி கூட வராது. அப்போது அதை முதலீடு எனக் கருதவே கூடாது" என்று அவர் தெரிவித்தார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications