நான் நோட்டாவின் வேட்பாளர்.. தமிழக மக்கள் பெருவாரியான ஆதரவு தாருங்கள்.. ஆனந்தராஜ் கோரிக்கை
சென்னை: நான் நோட்டாவின் வேட்பாளர். எனக்கு தமிழக மக்கள் பெருவாரியான ஆதரவு தர வேண்டும் என நடிகரும் அதிமுகவின் முன்னாள் நட்சத்திர பேச்சாளருமான ஆனந்தராஜ் கேட்டுக் கொண்டார்.
அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்தவர் நடிகர் ஆனந்தராஜ். ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுகவிலிருந்து விலகினார். இதைத் தொடர்ந்து அதிமுகவுக்கு எதிராக அவ்வப்போது கருத்துகளை தெரிவித்து வந்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் நடிகர் ஆனந்தராஜ் தனது நுங்கம்பாக்கம் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நடிகரும் அரசியல்வாதியுமான ஜேகே ரித்திஷ் மரணம் என்னை வெகுவாக பாதித்துவிட்டது. இதுவரை தமிழக பிரச்சினைகளுக்கு மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு எந்தவித உறுதிமொழியையும் பெறவில்லை.

சிந்திக்க வேண்டும்
நோட்டாவிற்கு வாக்கு சேகரிக்கவுள்ளேன். தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளேன். நோட்டாவுக்கு வாக்களிப்பதால் எந்தவித பயனும் இல்லைதான். ஆனால் நோட்டாவுக்கு ஏன் இத்தனை வாக்குகள் வந்தது என தேர்தல் ஆணையத்தை சிந்திக்க வைக்க வேண்டும்.

என் இனம்
நமது கோரிக்கைகளை நிறைவேற்றிய பிறகு நாம் யாருக்கு வாக்களிப்போம் என்பதை பார்ப்போம். நான் முதலியார் இனத்தவன். எனவே என் சமூகம் சார்ந்த மக்கள் நான் வாக்கு கேட்கும் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும். இங்கு எந்த அரசியல் கட்சியும் சாதி பார்க்காமல் அரசியல் செய்யவில்லை.

நீட் தேர்வு
நானும் எனது இனத்தை அடையாளப்படுத்துகிறேன். அவ்வளவே. நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டதாக அதிமுக கூறுகிறது. ஆனால் எங்களிடம் அதிமுக அத்தகைய கோரிக்கையை வைக்கவில்லை என பாஜக கூறுகிறது. இது தவறானது. நிச்சயம் இதற்கான விலையை மக்கள் அதிமுகவுக்கு கொடுப்பார்கள் என்றார்.

பார்க்கலாம்
ஒரு வேளை அதிமுகவில் பதவி கொடுத்தால் அதிமுகவை ஆதரித்து பிரசாரம் செய்வீர்களா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ஆனந்தராஜ் முதலில் பதவி கொடுக்கட்டும் அப்புறம் பார்க்கலாம் என கூறிவிட்டார்.












Click it and Unblock the Notifications