திருச்சி மாவட்ட திமுகவில் புதிய அத்தியாயம்... மாவட்ட பொறுப்பாளராக மகேஷ் நியமனம்
சென்னை: திமுக இளைஞரணி துணைச் செயலாளராக இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சி பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளார்.
திமுகவில் நிர்வாக ரீதியாக இதுவரை திருச்சி வடக்கு, தெற்கு என இருந்த மாவட்டங்கள் புதிதாக மத்திய மாவட்டம் சேர்க்கப்பட்டு 3 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த 27 ஆண்டுகாலமாக திருச்சி மாவட்டச் செயலாளராக பணியாற்றிய கே.என்.நேருவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
'திராவிடத்தால் வீழ்ந்தோம்' கோஷம் பொய்யா? திமுக, அதிமுக செய்தது சரிதான்.. பாஜக 'அங்கீகாரம்'
மாவட்டச் செயலாளர்
திமுகவை பொறுத்தவரை மாவட்டச் செயலாளர் பதவி என்பது மாவட்ட ஆட்சியர் பணிக்கு ஈடானது. கிளைக்கழக நிர்வாகிகள் முதல் மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வரை மாவட்டச் செயலாளர்களை மீறி எதுவும் செய்ய முடியாது என்பதால் இந்தப் பதவியை பெற பலரும் தீவிரம் காட்டுவதுண்டு. அதில் தலைமையின் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் திமுக பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி மாவட்ட அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளார்.
முக்கிய பகுதிகள்
கே.என்.நேருவிடம் இருந்த திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் பதவி இப்போது அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் தரப்பட்டுள்ளது. மணப்பாறை, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய வகையில் திருச்சி தெற்கு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மணப்பாறை சட்டமன்ற தொகுதி தொடர்ந்து அதிமுக வசம் உள்ளதால் அந்த தொகுதியை வரும் தேர்தலில் திமுகவசம் கொண்டு வரும் பெரும் பொறுப்பு மகேஷுக்கு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மத்திய
திருச்சி வடக்கு மாவட்டத்தை பொறுத்தவரை ஏற்கனவே மாவட்ட பொறுப்பாளராக இருந்த காடுவெட்டி தியாகராஜனே மீண்டும் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர் ஆகிய 3 தொகுதிகளை உள்ளடக்கிய பகுதி திருச்சி வடக்கு மாவட்டமாகவும், லால்குடி, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு ஆகிய 3 தொகுதிகளை உள்ளடக்கிய பகுதி திருச்சி மத்திய மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய மாவட்டத்துக்கு நேருவின் ஆதரவாளர் வைரமணி மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோரிக்கை
கடந்த ஒரு வாரமாக அன்பில் மகேஷ் மாவட்டச் செயலாளராகிறார் என தகவல்கள் வெளியாகிய நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது திமுக தலைமை. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட பொறுப்பாளர்களுடன் கிளை, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் இணைந்து பணியாற்றிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே திருச்சி தெற்கு மாவட்டத்தின் பல இடங்களில் பட்டாசு வெடித்து திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.