ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை.. பாமகவை முழுமையாக கையில் எடுக்கும் அன்புமணி.. ஆவேசமாக சொன்ன வார்த்தை!
சென்னை: பாமகவில் நிர்வாகிகள் நியமனம் மற்றும் மாற்றம் செய்ய ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்றும், எனது கடிதமே செல்லும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அம்மா மீது பாட்டிலை வீசினேன் என்று அபாண்டமான வார்த்தைகளை ராமதாஸ் பயன்படுத்தியதாக கூறிய அவர், என்னை நீக்க பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
பாமகவின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையிலான மோதல் உச்சத்தில் உள்ளது. அன்புமணி மீதான ஏராளமான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன் வைத்திருந்த நிலையில், இன்று சென்னையில் பாமக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. சோழிங்கநல்லூரில் நடந்த இந்த கூட்டத்தில் பாமகவின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

அன்புமணி ராமதாஸ் வரும் போதே, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் என்று கோஷம் தொண்டர்களால் எழுப்பப்பட்டது. காலையிலேயே அன்புமணி பேசிய போது ராமதாஸின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்திருந்தார். இந்த நிலையில் பாமகவிருக்கு க்யூ ஆர் கோடுடனான உறுப்பினர் அட்டையை அன்புமணி ராமதாஸ் வழங்கினார்.
அன்புமணி பேச்சு
அந்த க்யூஆர் கோடு மூலமாக கட்சியினர் பாமகவுக்கு எத்தனை தொகையை வேண்டுமானாலும் நன்கொடையாக அளிக்கலாம். கட்சிக்கு நிதி தேவை. சின்னச்சின்ன தொகையை கூட அளிக்கலாம். பாமக சார்பாக நடத்தப்பட்ட மாநாடு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. லட்சக்கணக்கான இளைஞர்கள் அமைதியாக இருந்து எழுச்சியுடன் நடைபெற்றது.
நிர்வாகிகள் மாற்றம்
இதனை டிஜிட்டலாக செயலியை உருவாக்க 2 ஆண்டுகளுக்கு முன்பாக தயார் செய்துவிட்டேன். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. இந்த செயலி மூலமாக பொதுப்பிரச்சனையை என் கவனத்திற்கு கொண்டு வரலாம். தற்போதைய சிக்கல்களை நிச்சயம் சரி செய்துவிடுவேன். காலையில் பொருளாளர் திலகபாமாவுக்கு மாற்றாக ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்திற்கு மாற்றாக உடனடியாக நான் கடிதம் அளித்தேன்.
பொதுக்குழுவுக்கு அதிகாரம்
ஏனென்றால் அவரை நீக்க எனக்கு அதிகாரமில்லை. பாமகவின் பொதுக்குழுவுக்கு மட்டும்தான் அதிகாரம் உள்ளது. தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட பாமக பொதுக்குழுவால் நாங்கள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளோம். பாமகவின் பொதுக்குழு தான் கட்சி. நீங்கள் யாரை தேர்வு செய்ய வேண்டுமோ, தேர்வு செய்யலாம். நான் ஏற்கனவே பதவிகளை பார்த்துவிட்டேன். ஆனால் என் மனதில் தலைவராக நினைக்கவில்லை.
பேச முடியவில்லை
என்னை பொறுத்தவரை அடிமட்ட தொண்டன். தலைமைத் தொண்டனாக பார்க்கிறேன். மனதில் நிறைய இருக்கிறது.. பேச முடியவில்லை.. கேமரா இருக்கிறது.. இனி நிர்வாகிகள் மாற்றம் தொடார்பாக என் கடிதம் தான் செல்லும். என்னை கட்சித் தலைவராக தேர்வு செய்ததில் இருந்தே மன உளைச்சல்தான். இனி நாம் வேகமாக செல்லலாம். எந்த தடை வந்தாலும், அதை உடைத்தெறிந்து முன்னேறுவோம்.
கொள்கை ராமதாஸ் வழி
பாமகவின் நிறுவனர் ராமதாஸின் கொள்கையை கடைபிடிப்போம். வரும் தேர்தலில் நமது கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். அதன்பின் நம் ஆட்சி நடக்க வேண்டும். மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற பிரச்சாரம் ஒரு ஆண்டு தான் செய்யப்பட்டது. அந்த பிரச்சாரத்தை 2019ல் செய்திருந்தால், நாம் ஆளுங்கட்சியாக இருந்திருப்போம். அதனை இப்போது செய்ய முடியாத சூழல். அதனை பேச வேண்டாம்.
அபாண்டமான குற்றச்சாட்டு
வாழ்க்கையில் சோதனைகள், அவமானங்கள், பழிகளை சுமந்திருக்கிறேன். அவையனைத்தும் என்னை வலிமையை கொடுத்துள்ளது. இப்போதும் அப்படிதான். யார் யாரோ என்னென்னமோ பழி போட்டார்கள். ஆனால் உலகில் அதிகம் நேசிப்பது எனது அம்மா தான். அவர்களுக்கும் என் மீது அதிக பாசம். அபாண்டமான வார்த்தைகளை மட்டுமே தாங்க முடியவில்லை. இதுவும் கடந்து போகும்.
சிறந்த குழு
இனி பொறுப்பில் இருந்து மாற்றிவிட்டார்கள் என்று யாரும் கவலைப்பட வேண்டாம். அடுத்த 10 நிமிடத்தில் மாற்றி அறிவிக்கப்படும். எனக்கு சிறந்த குழு ஒன்று அமைந்துள்ளது. அந்த குழுவை கலைக்க குழப்பங்கள் வந்துள்ளன. அதனை பேச அசிங்கமாக உள்ளது. நீங்கள் தொண்டர்கள் அல்ல.. தோழர்கள்.. நிச்சயமாக வெற்றிபெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications