உண்மையாகவே சமூக நீதியில் அக்கறை இருக்கா இல்லையா? திமுக அரசை சரமாரியாக தாக்கிய அன்புமணி!
சென்னை: ஓபிசி பிரிவினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்கள் 10.50 விழுக்காட்டுக்கும் கூடுதலான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதாக தமிழக அரசு ஆர்.டி.ஐ கேள்விக்கு பதில் அளித்துள்ள நிலையில், வன்னியர்களுக்கு கூடுதலாக பிரதிநிதித்துவம் கிடைத்து விட்டது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த தமிழக அரசு முயன்றால் அதற்கு கிடைக்கப் போவது படுதோல்வி தான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த பொன்பாண்டியன் என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி (ஆர்.டி.ஐ) எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் தகவல்களை வெளியிட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்கள் 10.50 விழுக்காட்டுக்கும் கூடுதலான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது பணியில் உள்ள துணை ஆட்சியர் நிலையிலான 542 பேரில், 63 பேர் அதாவது 11.60 விழுக்காட்டினர் வன்னியர்கள் என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. காவல்துறை உதவி ஆய்வாளர் நியமனங்களில் வன்னியர்கள் 10.50%க்கும் கூடுதலான பிரதிநிதித்துவம் பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திமுக அரசு திட்டமிட்டே, இந்த தகவலை இப்போது வெளியிட்டுள்ளதாகவும், குரூப் 1 பிரிவில் ஒட்டுமொத்தமாக பணியில் உள்ள வன்னியர்களின் எண்ணிக்கையை தமிழக அரசு அளித்து உள்ளது. அவர்களின் மூன்றில் 2 பங்கினர் வருவாய் ஆய்வாளர் நிலையில் பணியில் சேர்ந்து பதவி உயர்வு மூலம் இந்த நிலையை அடைந்திருப்பார்கள். அவர்கள் ஓரிரு ஆண்டுகள் கூட இந்த பணியில் இருக்க மாட்டார்கள். அவர்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் குரூப் 1 பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டதாக கூறுவது பித்தலாட்டம் என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும், தமிழக அரசு வெளியிட்ட தகவலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்கள் 10.50%க்கும் கூடுதலான பிரதிநிதித்துவம் பெற்று விட்டதாக திரிக்கப்பட்ட, அரைகுறை விவரங்களுடன் கூடிய புள்ளிவிவரங்களை தகவல் பெறும் உரிமை சட்டப்படி பதில்களாக வெளியிட்டுள்ள தமிழக அரசு, இப்போது அடுத்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.
தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களை தொகுத்துள்ள தமிழக அரசு, அதை தமிழக அரசின் செய்திக்குறிப்பு என்ற குறிப்பு இல்லாமல் அனாமதேய செய்தி போன்று பிரைவேட் நியூஸ் என்ற பெயரில் அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பி செய்தி வெளியிடும்படி கட்டாயப்படுத்துவதாக ஊடக நண்பர்கள் சிலரே என்னிடம் குறைபட்டுக் கொண்டனர்.
திமுக அரசு மேற்கொண்டு வரும் வன்னியர் சமூகநீதி படுகொலையில் ஊடகங்களையும் கூட்டாளிகளாக்கக் கூடாது; அந்தப் பாவத்தில் பத்திரிகையாளர்களையும் பங்கேற்கச் செய்யக் கூடாது. இது போன்ற மோசடிகளை அரங்கேற்றுவதன் மூலம் வன்னியர்களுக்கு கூடுதலாக பிரதிநிதித்துவம் கிடைத்து விட்டது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த தமிழக அரசு முயன்றால் அதற்கு கிடைக்கப் போவது படுதோல்வி தான்.
தமிழக அரசுக்கு உண்மையாகவே சமூக நீதியில் அக்கறை இருந்தால், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் அடிப்படையில் அனைத்து சமுதாயங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க முன்வர வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications