Anbumani: போலி வழக்கறிஞர் அருள்! தைலாபுரத்துடன் ஒட்டோ உறவோ இல்லை! அன்புமணி திட்டவட்டம்
சென்னை: தைலாபுரத்தில் பூசாரிகள் இருக்கும் வரை அவர்களுடன் ஒட்டோ உறவோ இல்லை என பாமக தலைவர் அன்புமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தைலாபுரத்தில் பூசாரிகள் இருக்கும் வரை அவர்களுடன் ஒட்டோ உறவோ இல்லை. பாமக எனது தலைமையில் அதிகாரப்பூர்வமாக இயங்குகிறது.

போலி வழக்கறிஞர் அருள் அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கு தொடுத்து தோல்வி அடைந்துள்ளார். சமாதான புறாக்கள், வெள்ளைக் கொடி என கத்திக்குத்து கந்தன், பவர் ஸ்டார் கும்பல்களின் வதந்திகளை நம்ப வேண்டாம்.
நீதிமன்றம் அபராதம் விதிக்கும் என பயந்துதான் மனுவை திரும்ப பெறுகின்றனர். மற்றபடி வேறு காரணம் இல்லை என அன்புமணி தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பான ராமதாஸ் தொடர்ந்த முக்கிய வழக்குகள், கட்சியின் தலைமைப் பிரச்சினை, மாம்பழம் சின்னம், கட்சி பெயர், கொடி ஆகியவற்றை அன்புமணி ராமதாஸ் பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரியவை ஆகும்.
பாமக நிறுவனரான ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸ் கட்சியை அபகரித்துவிட்டதாகக் குற்றம்சாட்டி, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகளைத் தொடர்ந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 20 அன்று, மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரியும், தேர்தல் ஆணையத்தை ராமதாஸ் தலைமையை அங்கீகரிக்க உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட இரு ரிட் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உள்கட்சி விவகாரங்களை உரிமையியல் நீதிமன்றத்தில் தீர்க்க வேண்டும் என்றும், ரிட் மனுக்கள் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் ராமதாஸ் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டது.
மற்றொரு வழக்கில், பாமக பெயர், சின்னம், கொடியை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்கக் கோரி ராமதாஸ் தொடர்ந்த மனுவுக்கு, சென்னை உரிமையியல் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் மற்றும் அன்புமணி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு வரும் மார்ச் 9க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 6 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், அங்கீகாரம் பெறாத கட்சிகளின் உள் தகராறுகளில் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறி, ராமதாஸ் தரப்புக்கு ஆதரவாக உள்ளது. ராமதாஸ் இதை தனக்கு வெற்றி என்று அறிவித்தார்.
அன்புமணி தரப்பு 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை தலைவராக இருப்பதாகக் கூறினாலும், உரிய சிவில் நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற வேண்டும் என்ற நிலை உள்ளது.
இந்த வழக்குகள் பாமகவின் தந்தை-மகன் இடையேயான மோதலை பிரதிபலிக்கின்றன. தற்போது ராமதாஸ் தரப்பு உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடி வருகிறது.
இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் வேறு நெருங்குவதால் பாமக நிறுவனர் ராமதாஸ் திண்டிவனத்தில் கட்சியின் தலைமை நிர்வாக குழுவுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
தற்போது பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையேயான உள் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், கட்சியின் ஒற்றுமை மற்றும் தேர்தல் உத்தி குறித்து அவசரமாக முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பாமகவின் வாக்கு வங்கி முக்கியமானதாக இருப்பதால், எந்த கூட்டணியுடன் இணைவது என்பது தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த அருள், "அன்புமணி தரப்புடன் கூட்டணியில் இணைந்து பணியாற்றுவோமா என்பது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை." என தெரிவித்திருந்தார். இதற்குத்தான் அன்புமணி, தைலாபுரத்துடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications