சென்னைக்கு பெரிய ஆபத்து காத்திருக்கிறது; அன்புமணி ராமதாஸ் பகீர் தகவல்!
சென்னை: கடல் மட்ட உயர்வால் சென்னை, கொச்சின், மும்பை உள்ளிட்ட 7 நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
மேலும், புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த மக்கள் ஆடம்பரத் தேவைகளைத் தவிர்த்து விட்டு, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

காலநிலை மாற்ற மாநாடு
புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 26-வது ஐநா காலநிலை மாற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட வரைவுத் தீர்மானத்தில் உறுதியான செயல்திட்டங்கள் எதுவும் இல்லாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. உலகம் பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், அதைத் தடுக்க ஒருங்கிணைந்து, விரைந்து செயல்பட வேண்டும் என்பதை வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் உணர வேண்டும்.

நிலக்கரி பயன்பாடு
புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக ஸ்காட்லாந்து தலைநகர் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 26-ஆவது காலநிலை மாற்ற மாநாட்டில் நிலக்கரி பயன்பாட்டை முற்றிலுமாக கைவிடுவது குறித்து உறுதியாக முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கருத்து வேற்றுமை
ஆனால், உலகின் வளர்ந்த நாடுகளுக்கும், சீனா, இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கும் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படாததால் அவ்வாறு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நிலக்கரி பயன்பாட்டை 2030-க்குள் முழுமையாக கைவிடுவதற்கு பதிலாக குறைக்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

7 நகரங்கள்
பாரிஸ் உடன்படிக்கையின்படி புவிவெப்பமயமாதல் 1.5% டிகிரிக்குள் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் அதனால் அதிகம் பாதிக்கப்படுபவை உலகின் ஏழை நாடுகள் தான். புவிவெப்பமயமாதல் கட்டுப்படுத்தப் படாவிட்டால் உலகில் பல தீவுகள் கடலில் மூழ்கி விடும். கடல் மட்ட உயர்வால் சென்னை, கொச்சி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 7 இந்திய நகரங்கள் கடலில் மூழ்கி விடும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இயற்கையுடன் இணைந்து
இத்தகைய ஆபத்துகளை உணர்ந்து உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இந்திய மக்கள் அனைவரும் ஆடம்பரத் தேவைகளைத் தவிர்த்து விட்டு, இயற்கையுடன் இணைந்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும்.












Click it and Unblock the Notifications