வன்னியர் மாநாட்டால் திருஷ்டி.. அப்பாவிடம் மன்னிப்பு கேட்ட அன்புமணி! பாமகவில் அடுத்த ‘ட்விஸ்ட்’ என்ன?
சென்னை: மாமல்லபுரத்தில் கடந்த மாதம் ஒரு பிரம்மாண்ட வன்னியர் சங்க மாநாடு நடத்தினோம் அந்த மாநாட்டின் 'திருஷ்டி' தான் தற்போது எங்களுக்குள் பிரச்சனை நடைபெற்று வருகிறது எனவும், விரைவில் திருப்போரூர் முருகனை வணங்கி தமிழக மக்களின் உரிமை மீட்பு நடைபயணத்தை தொடங்க இருக்கிறேன் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், தந்தையிடம் மன்னிப்பு கேட்பதாக அன்புமணி கூறியிருக்கும் நிலையில், அடுத்து என்ன? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
பாமகவில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்த நிலையில் இன்னும் சில நாட்களில் அது முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் நிறுவனரான ராமதாஸ் உடன் அன்புமணி ராமதாஸ் மோதல் போக்கை கையாண்டு வந்தார்.
கட்சியின் நிகழ்ச்சிகளில் அன்புமணி ராமதாஸை நேரடியாகவும் சில நேரங்களில் மறைமுகமாகவும் ராமதாஸ் விமர்சித்து பேசினார். உச்சபட்ச மோதலாக பல லட்சம் பேர் திரண்டு இருந்த வன்னியர் சங்க மாநாட்டில் கட்சிக்குள் கூட்டணி வேண்டாம்.. இங்கே நடக்காது தம்பி என ராமதாஸ் பேசியது, சொந்த கட்சி நிர்வாகிகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ராமதாஸ்
அதற்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பின்போது குடும்ப விவகாரங்களை பொதுவெளியில் பேசி அதிர வைத்தார் ராமதாஸ். மேலும் பாமக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட 55க்கும் மேற்பட்டோரை நீக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அவர்கள் அனைவரும் பதவியில் தொடர்வதாக மறு அறிவிப்பு வெளியிட்டார் அன்புமணி.
அன்புமணி ராமதாஸ்
இப்படியாக பரபரப்பான சூழல்கள் நடந்தேறிக் கொண்டிருக்கும் நிலையில், பாமக பொதுக்குழு நடைபெற்றுள்ளது. அதில், டாக்டர் ராமதாஸிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார் அன்புமணி. நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்; ஒரு தந்தையிடம் மகன் மன்னிப்பு கேட்பது பெரிய விஷயம் அல்ல என்றும் கூறி நெகிழ வைத்துள்ளார்.
பாமக மோதல்
மேடையில் பேசிய அன்புமணி," மருத்துவர் அய்யா அவர்களே என் மீது ஏதாவது கோபம் இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.. தந்தையிடம் மன்னிப்பு கேட்பது ஒரு பெரிய விஷயம் அல்ல.. பத்தாண்டுகளுக்கு முன்பு ஐயாவுக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. தற்போது ஐயாவுக்கு சுகர் பிபி எல்லாம் உள்ளது. அதனால்தான் சொல்கிறேன் அவர் டென்ஷன் ஆக கூடாது. என்ன செய்ய வேண்டும் என சொல்லுங்கள் ஒரு மகனாக கட்சியின் தலைவராக அதனை நான் செய்து முடிக்கிறேன். ஐயா அவர்களே வருத்தப்படாதீர்கள் கவலைப்படாதீர்கள் கோபப்படாதீர்கள்." என கூறியுள்ளார்.
மேடையில் மன்னிப்பு
அன்புமணி ராமதாசை நினைத்தாலே எனக்கு பிபி சுகர் ஏறுகிறது என ராமதாஸ் கூறியிருந்த நிலையில் வெளிப்படையாக அதுவும் பொது மேடையில் மன்னிப்பு கேட்டிருக்கிறார் அன்புமணி. இது அன்புமணி ஆதரவாளர்கள் மட்டுமல்லாது ராமதாஸ் ஆதரவாளர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தந்தை மகன் இடையே மோதல் அதிகரித்து வந்த நிலையில் அன்பு மணியின் இந்த பேச்சு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்கின்றனர்.
பாமக நிர்வாகிகள் ஆதரவு
இது ஒரு புறம் இருக்க ராமதாஸ் தரப்பிலும் அன்புமணி தரப்பிலும் அடுத்தடுத்து போட்டி பொதுக்குழு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கட்சியில் மாவட்ட செயலாளராக இருந்தவர்களை நீக்கியதாக ராமதாஸ் அறிவித்தாலும், அவர்கள் பதவியில் தொடர்வதாக அன்புமணி கூறியிருக்கிறார். அவர்கள் மாவட்ட வாரியாக பொதுக்குழு நடத்தி வரும் நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட ராமதாஸ் தரப்பு நிர்வாகிகளும் பல்வேறு மாவட்டங்களில் போட்டி பொதுக்குழு கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கோஷ்டி மோதல்
இப்படியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பாமகவில் இரு கோஷ்டிகள் உருவாகி இருக்கிறது. சிலர் அன்புமணி வந்த பிறகு பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ராமதாஸ் தரப்பால் பதவியில் அமர்த்தப்பட்டதாக அறிவித்திருக்கிறார். தற்போது உள்ளூர் வாட்ஸாப் குரூப்புகள் தொடங்கி ஃபேஸ்புக் வரை இரு தரப்பும் மோதி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications