ஆஹா! 3 முக்கிய பிரச்சினைகளை கையில் எடுத்த பாமக!.. 2026ல் கோட்டையில் "கொடி நாட்ட" பக்கா ஸ்கெட்ச்
சென்னை: 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் பக்காவாக வியூகம் வகுத்து வருகிறார்.
வடதமிழகத்தில் செல்வாக்கு மிக்க கட்சியாக திகழும் கட்சிகளில் பாமகவும் ஒன்று. அதிலும் கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டணியில் இருந்து கொண்டு போராடி 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டை பெற்றவுடன் பாமகவுக்கு பரவலாக செல்வாக்கு அதிகரித்துள்ளது. கொங்குவிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற இந்த திட்டம் கை கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நிழல் நிதி நிலை அறிக்கையை ஆண்டுதோறும் வெளியிடும் ஒரே கட்சி பாமகதான். அது போல் வேளாண் துறைக்கென தனி நிழல் நிதி நிலை அறிக்கையையும் பாமகதான் வெளியிட்டு வருகிறது.

பாமக
பாமக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்களை செய்யும் என்பதை இந்த நிழல் நிதி நிலை அறிக்கை மூலம் மக்கள் அறிந்து கொள்ள இது வாய்ப்பாகிறது. அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்த போது 108 ஆம்புலன்ஸ் சேவை, புகைப்பிடிப்பது உடல் நலனுக்கு கேடு என சிகரெட்டில் வாசகம், புகையிலை ஒழிப்பு, பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை, குட்காவிற்கு தடை, திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் என நல்ல பல திட்டத்தை செய்துள்ளார்.

மாற்றம் முன்னேற்றம்
மாற்றம், முன்னேற்றம் என்ற திட்டத்தையும் முன்னெடுத்து பாமக ஆட்சிக்கு வந்தால் கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றை இலவசமாக கொடுப்போம் என கூறி ஒரு பெரிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தார். எனினும் பாமக ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி அமைத்தே போட்டியிடுகிறது. மக்கள் நல பிரச்சினைகளை முன்னெடுத்தாலும் குரல் கொடுத்தாலும் பாமக ஆட்சி அமைக்க முடியவில்லையே என பாமக நிறுவனர் ராமதாஸ் மேடையிலேயே கண்கலங்கினார்.

சட்டசபை தேர்தல்
இந்த நிலையில் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வீடு வீடாக இப்போதிலிருந்தே பிரச்சாரம் செய்வது, திண்ணை பிரச்சாரம் உள்ளிட்டவற்றை முன்னெடுக்குமாறு ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். பாமக தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி 2026 இல் பாமக ஆட்சி அமைந்தே தீர வேண்டும் என பல்வேறு யுத்திகளை வைத்துள்ளார்.

காவிரி உபரி நீர் திட்டம்
முதலில் காவிரி உபரிநீர் திட்டம் அமல், போதை பொருள்கள் ஒழிப்பு, ஆன்லைன் ரம்மிக்கு தடை ஆகிய 3 முக்கிய திட்டங்களை முன்னெடுத்து அன்புமணி ராமதாஸ் பிரச்சார பயணத்தை தொடங்கியுள்ளார். தற்போது தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கான காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கடந்த 19 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு எழுச்சி நடைபயணத்தை அன்புமணி தொடங்கினார். இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்திக்க போவதாகவும் தெரிவித்திருந்தார். அது போல் ஆன்லைன் ரம்மிக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். போதை பொருளை அறவே ஒழிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார். மக்கள் நல திட்டங்களுக்காக குரல் கொடுத்து வரும் நிலையில் 2026இல் பாமக தலைமையிலான ஆட்சி அமைகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications