பாமக ராமதாஸை சுற்றி துரோகிகள் கூட்டம்.. முக்கியமான துரோகி? - போட்டுடைத்த அன்புமணி
சென்னை: தமிழ்நாடு அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவுகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், ராமதாஸை சுற்றி சில துரோகிகள் உள்ளதாகவும், அதில் முக்கியமான துரோகி ஜிகே மணி என்றும் அன்புமணி பேசியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் பரபரப்பான வியூகங்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்ட தொடங்கியுள்ளனர்.

அன்புமணி, ராமதாஸ் பனிப்போர்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுக கூட்டணியில் முட்டு கட்டை போட்டுவிட்டனர். அவர் திமுக அல்லது தவெகவுடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ராமதாஸ் தரப்பிலான பாமக, தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே கூட்டணி முடிவை அறிவிக்காமல் உள்ளனர். அன்புமணி தரப்பிலான பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துவிட்டார். ராமதாஸ் திமுக அல்லது தவெகவுடன் இணைவார் என்று கூறப்பட்டது.
ராமதாஸை சுற்றி துரோகிகள்
பாமகவில் தந்தை, மகன் அதிகார போட்டியும் உச்சத்தில் உள்ளது. கட்சிக்கு உரிமை கோரி ராமதாஸ், அன்புமணி இருவரும் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், சென்னையில் இளைஞரணி பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் அன்புமணி பேசுகையில், ராமதாஸை சுற்றி சில துரோகிகள் உள்ளனர். ராமதாஸிடம் பொய் பொய்யாகக் கூறி அவரது மனதை மாற்றுகின்றனர். பொய்யான தகவல்களைச் சொல்கின்றனர். நேற்று கூட மாம்பழம் சின்னம் நமக்குதான் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதைப் பற்றியும் ராமதாஸிடம் பொய்யாகத் தெரிவித்துள்ளனர்.
முக்கியமான துரோகி
ராமதாஸை சுற்றியுள்ள துரோகிகளில் முக்கியமான துரோகி ஜி.கே.மணி. இதைப் பற்றி சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது, பின்னர் கூறுகிறேன். இந்தக் கூட்டத்தில் அவரைப் பற்றிப் பேசுவதற்கான தகுதியை ஜி.கே.மணி இழந்துவிட்டார்.
நமக்குள் விமர்சனம் செய்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். நமக்கு ஒரே எதிரி திமுகதான். சூழ்ச்சியினால் தான் இந்த குழப்பங்கள் எல்லாம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. நமக்குள் குழப்பத்தை திமுகவினர் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இங்கேயும், அங்கேயும் கொழுத்திப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
குழப்பம் ஏற்படுத்துவதில் திமுகவினர் பிஎச்டி படித்துள்ளனர். எப்படி குழப்பம் ஏற்படுத்த வேண்டும். யாரைப் பயன்படுத்தி குழப்பம் ஏற்படுத்துவது என்று செய்து கொண்டிருக்கின்றனர். அதனால், நம்முடைய ஒரே குறிக்கோள் திமுகவை வீழ்த்துவது தான் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications