கடன் தொல்லை! தம்பதி ஒருவரை ஒருவர் கத்தியால் குத்தி தற்கொலை முயற்சி! கணவர் பலி! மனைவிக்கு சிகிச்சை
சென்னை: ஆந்திரா மாநிலத்தில் தம்பதி, கடன் தொல்லை காரணமாக ஒருவரை ஒருவர் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற போது கணவர் பலியாகிவிட்டார். மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆந்திரா மாநிலம், குண்டூர் மாவட்டம், கேபிஎச்பி காலனியில் வசித்தவர் ராமகிருஷ்ணா ரெட்டி (45). இவரது மனைவி ரம்யா கிருஷ்ணா (38). இவர்களுக்கு 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு குழந்தை இல்லை. ராமகிருஷ்ணா ஒரு யூடியூப் சேனலில் பணியாற்றி வந்தார். இதற்கு முன்பு அவர் நிறைய வியாபாரங்களை செய்து அதில் பொருளாதார ரீதியில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. இதனால் கடன் தொல்லை அதிகமானது.
கடந்த சில மாதங்களாக கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தது தெரியவந்தது. ஆனால் இவர்களால் கடனை அடைக்க முடியவில்லை. வாங்கும் சம்பளம் வயிற்றுக்கும் வாய்க்குமே சரியாக போகிறது. இதில் அவர்களால் எப்படி கடனை அடைக்க முடியும்.
இதனால் என்ன செய்வது என தெரியாமல் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். எனினும் தங்களை தாங்களே கத்தியால் குத்திக் கொள்ள அஞ்சினர். இதையடுத்து ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குத்திக் கொலை செய்து இறக்கலாம் என முடிவு செய்தனர்.
கடந்த 4 நாட்களாக இப்படி ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக் கொண்டனர். இதனால் வயிற்றுப்பகுதியில் ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து ராமகிருஷ்ணா வெள்ளிக்கிழமை அன்று மரணமடைந்தார். இந்த கத்திக்குத்தில் படுகாயமடைந்த ரம்யா, தனது கணவரின் சடலத்துடன் சனிக்கிழமை வரை இருந்தார்.
தனது உயிரும் பிரிந்து விடும் என நினைத்த நிலையில் அவரால் வலியை தாங்க முடியவில்லை. இதனால் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து பார்த்த போது ராமகிருஷ்ணா இறந்து கிடந்தார். ரம்யா கிருஷ்ணா ஷோபாவில் சோர்வாக அமர்ந்திருந்தார்.
அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். "கடன் கொடுத்தவர்களின் தொல்லையால் அவமானங்களை தாங்க முடியவில்லை. இந்த உலகத்தில் எங்களால் வாழ முடியவில்லை.
அதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கொண்டோம்" என அவர்கள் எழுதியிருந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். இந்த கடிதம் 15 நாட்களுக்கு முன்பே எழுதப்பட்டிருந்ததாம். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மூன்று மாதங்களுக்கு முன்ப தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் ரம்யா கிருஷ்ணா தெரிவித்திருந்தார்.
தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications