ஆந்திராவில் கூகுள் முதலீடு.. தமிழக கட்சிகளின் விமர்சனங்களுக்கு நாரா லோகேஷ் கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனம் 15 பில்லியன் டாலர் செலவீட்டில் டேடா செண்டர் அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில், தமிழரான சுந்தர் பிச்சை சி இஒவாக இருந்தும் முதலீட்டை கோட்டை விட்டு இருப்பதாக தமிழக அரசை அதிமுக விமர்சித்தது. இது தொடர்பாக திமுகவும் பதிலடி கொடுத்தது. கூகுள் முதலீடு விவகாரத்தில் திமுக - அதிமுக வார்த்தை யுத்தத்திற்கு நடுவே ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பாக ரியாக்ட் செய்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், உலகின் டாப் டெக் நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் ரூ.87,570 கோடி செலவில் டேட்டா சென்டரை அமைக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த வாரம் கையெழுத்தானது. 1 ஜிகா வாட் திறன் கொண்ட மிகப் பெரிய டேட்டா சென்டரை அமைக்க கூகுள் திட்டமிட்டுள்ளது.

அதிமுக கடும் விமர்சனம்
ரூ.10 லட்சம் பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் அமைய இருக்கும் இந்த டேட்டா சென்டர் என்பது நாட்டின் மிகப் பெரிய நேரடி வெளிநாட்டு முதலீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தமிழ்நாட்டை பூர்வீமாக கொண்டவர் என்பதால், சாதகமான சூழல் இருந்தும் தமிழ்நாடு இந்த முதலீட்டை பிடிக்காமல் கோட்டை விட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
குறிப்பாக அதிமுக, ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. இன்று கூட செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தனது விமர்சனங்களை முன்வைத்தார். உதயகுமார் கூறுகையில், "கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். நம்முடைய மதுரை மண்ணின் மைந்தர். உலகளாவிய அளவில், தொழில்நுட்பத்துறையில் புயலை கிளப்பி வருகிறார்.
நாரா லோகேஷ் பதில்
சுந்தர் பிச்சையை அணுகி உரிய அழைப்பு கொடுத்திருந்தால் தமிழகத்திற்கு இந்த மையம் வந்து இருக்கும்" என்று பேசியிருந்தார். கூகுள் நிறுவனத்தின் மெகா முதலீடு, ஆந்திராவிற்கு சென்றது தொடர்பாக தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ஆளும் அரசை விமர்சித்தும் வார்த்தை யுத்தம் நடத்தி வரும் நிலையில், இது தொடர்பாக ஆந்திர அமைச்சரும் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் தனது எக்ஸ் பதிவில் ரியாக்ட் செய்துள்ளார்.
சுந்தர் பிச்சை தமிழராக இருந்த போதிலும் ஆந்திராவை தேர்வு செய்துவிட்டார் என்ற அதிமுகவின் விமர்சனத்தை செய்தியாக பகிர்ந்த பிரபல ஆங்கில தொலைக்காட்சியின் நியூஸ் கார்டை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள நாரா லோகேஷ், சுந்தர் பிச்சை பாரதத்தை தேர்வு செய்து இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.
டிஆர்பி ராஜா விளக்கம்
முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மதுரையில் பிறந்தவர் என்ற போதிலும், கூகுள் நிறுவனத்தை தமிழகத்திற்கு கொண்டு வர தமிழக அரசு தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். முதல்வர் மு.க. ஸ்டாலினையும், அவரது தலைமையிலான அரசையும் கடுமையாக விமர்சித்தார்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தமிழகத்திற்கு ஃபாக்ஸ்கான் நிறுவனத்திடம் இருந்து சுமார் ₹15,000 கோடி முதலீடு வரவுள்ளது என்றார். இது கூகுள் முதலீட்டை விட மிகப் பெரியது என்றும் கூறினார். ஃபாக்ஸ்கான், ஆப்பிள் ஐபோன்களுக்கான பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஆகும். எனினும், அதுபோன்ற முதலீடு எதுவும் செய்யும் திட்டமில்லை என்று ஃபாக்ஸ்கான் மறுப்பு தெரிவித்திருந்தது.
அதானியின் தலையீடு இருக்கிறது
இது குறித்து பேசிய தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறுகையில், ''கூகுள் நிறுவனம் ஆந்திர மாநிலம் சென்றதன் பின்னணியில் அதானியின் தலையீடு இருக்கிறது. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் முதலீடு நூறு சதவீதம் உண்மையானது, உறுதியானது. ஃபாக்ஸ்கான் பல நிறுவனங்களை வைத்திருக்கும் நிலையில், அதில் ஒரு நிறுவனத்திடம் கேட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் முதலீடு மற்றும் அதன் மூலம் தமிழ்நாட்டில் 14,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் நிச்சயம் உருவாக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications