42வது அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா! அமைச்சர் பொன்முடி பெயர் எங்கே? வெடிக்கும் புதிய சர்ச்சை!
சென்னை: அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த பேனரில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் பெயர் இடம்பெறாதது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
Recommended Video
பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ரவி ஆகிய மூவரின் பெயர்கள் மட்டுமே அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையில் இருந்த பேனரில் இடம்பெற்றிருந்தன.
பிரதமர் மோடியை முதன்மை விருந்தினர் என்றும் ஆளுநர் ரவியை தலைமை எனவும் போட்டிருந்ததுடன் முதல்வர் ஸ்டாலினை வெறும் கவுரவ விருந்தினர் என்று மட்டும் போடப்பட்டிருந்தது..

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி முதன்மை விருந்தினராக அதில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதனிடையே இந்த விழாவுக்கான விளம்பர பேனரில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் பெயர் புறக்கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இணை வேந்தர் அந்தஸ்தில் உள்ள ஒருவரது பெயர் எப்படி விடுபட்டது என்பது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

பனிப்போர்
ஆளுநர் ரவிக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கும் ஏற்கனவே ஏழாம் பொருத்தம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அண்மையில் நடைபெற்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் போதும் அவர்கள் இருவருக்கும் இடையே பனிப்போர் நடந்தது. அந்த பனிப்போர் இன்றைய அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் எதிரொலித்தது என்று கூட சொல்லலாம்.

இருக்கைகள் ஒதுக்கீடு
அதேபோல் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருந்தது. ஆளுநர் ரவியும், பிரதமர் மோடியும் மேடையில் நடுநாயகமாக அமர்ந்திருக்க அவர்களுக்கு அடுத்தபடியாக முதல்வர் ஸ்டாலினுக்கும் அமைச்சர் பொன்முடிக்கும் இடது புறம் இருக்கைகள் போடப்பட்டிருந்தது. ஆளுநர் ரவிக்கு அருகில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அமர்ந்திருந்தார்.

துணை வேந்தர்
இதனிடையே இந்த விழாவில் வரவேற்று பேசிய அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ், பிரதமரை மட்டும் மிகுதியாக புகழ்ந்தார். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோரை குறிப்பிடும் போது வரவேற்க மட்டும் செய்தார். இதேபோல் தமிழ் அன்னைக்கு ஒரு வணக்கம், பாரத மாதாவுக்கு ஒரு வணக்கம், என இரண்டு வணக்கங்களை வைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ்.












Click it and Unblock the Notifications