சால்வை போடுபவன் எல்லாம் திமுக காரனா? அண்ணா பல்கலை. விவகாரம்.. அமைச்சர் ரகுபதி பரபரப்பு விளக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவன் திமுகவை சேர்ந்தவன் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகிறது. இதற்கிடையே சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதில் கைதாகியுள்ள ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவன் என்று எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றனர். இதற்கிடையே சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அமைச்சர் ரகுபதி:
புகார் அளிக்கப்பட்டு 6 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்ட அவர், குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபருக்கும் திமுகவுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், குற்றவாளியைக் காப்பாற்றும் எண்ணம் இல்லை என்று அவர், குற்றவாளிக்கு உரியத் தண்டனை பெற்றுத் தருவோம் என்றும் தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை என்ற அவர், விவரங்களை வெளியிட்டால் பாதிக்கப்பட்ட பெண் எப்படி தைரியமாகப் புகார் அளித்திருப்பார் என்றும் கேள்வி எழுப்பினார். தமிழக அரசு மீது நம்பிக்கை இருந்ததாலேயே பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். இந்த விவகாரத்தை அரசியலாக்க நினைத்தால் அது நடக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
கைது நடவடிக்கை:
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, "அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்திற்கு ஞானசேகரன் என்பவர் காரணமாக இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. புகார் அளிக்கப்பட்டு 5, 6 மணி நேரத்திற்குள் குற்றவாளியைக் கண்டறிந்து கைது செய்துள்ளோம். அந்த நபர் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் இல்லை:
போலீசார் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த வழக்கை மூடி மறைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. கைதான ஞானசேகரன் திமுகவில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. ஆனால், அவர் திமுகவை சேர்ந்தவர் என்பது போலவும் திமுக மாணவரணி நிர்வாகி என்பது போலவும் தகவல் பரவி வருகிறது. ஆனால், அது உண்மை இல்லை.
ஞானசேகரன் துணை முதல்வருடன் இருக்கும் போட்டோவை சிலர் பரப்பி வருகிறார்கள். அந்த போட்டோவை பார்த்தாலே தெரியும்.. துணை முதல்வர் வருகிறார், அவர் வரும் வழியில் இவர் நின்று இருக்கிறார். அதை வேறு யாரோ போட்டோவாக எடுத்துள்ளார். நடந்து வரும் போது இதுபோல போட்டோ எடுப்பது இப்போது சகஜமாக நடக்கிறது. அதைத் தடுக்க முடியாது. யார் இதுபோல எடுக்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கவும் முடியாது.
அமைச்சருடன் இருக்கும் போட்டோ:
அதேபோல அமைச்சர் மா. சு உடன் இருப்பது போன்ற படமும் ரவி வருகிறது. அமைச்சர் மா சுப்பிரமணியன் தைசாப்பேட்டையை சேர்ந்தவர். அந்த தொகுதியில் மா.சு நிறைய நலத்திட்டங்களைச் செய்து இருப்பார். அதற்காக நன்றி சொல்ல வருவோர் அவருடன் போட்டோ எடுக்கலாம். சும்மா வருவோர் கூட சால்வை போட்டுப் போட்டோ எடுக்கலாம். அதையெல்லாம் தடுக்க முடியாது.
ஆனால், இந்த ஞானசேகரனுக்கும் திமுகவுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. விசாரணை துரிதமாக நடந்து வருகிறது. அவருக்குத் தண்டனை வாங்கி தரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சட்ட ஒழுங்கு:
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பல்வேறு நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான். பாதிக்கப்பட்ட பெண் துணிச்சலாகப் புகார் அளிக்க அரசின் மீது இருந்த நம்பிக்கையே காரணம்" என்றார்.












Click it and Unblock the Notifications