ஞானசேகரன் மட்டும்தான் குற்றவாளி! இனி யார் அந்த சார்னு கேட்டால் நீதிமன்ற அவமதிப்புதான்! அரசு வக்கீல்
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரனை தவிர வேறு யாருக்கும் தொடர்பில்லை. இனியும் வேறு ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக யாராக சொன்னால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி, செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் இன்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு கிடைத்துள்ளது. இதில் முக்கியமாக கருதப்பட வேண்டியது, எல்லா சாட்சியங்களும் அரசு தரப்புக்கு சாட்சியை நிரூபிக்கக் கூடிய வகையில் அவர்களது ஆதாரங்கள் இருந்தன.

ஞானசேகரனுக்கான தண்டனை ஏக காலத்தில் அனுபவிக்க கூடிய வகையில் கொடுத்துள்ளார்கள். இப்படித்தான் வழக்கமாக கொடுப்பார்கள். அவருக்கு எதிரான 11 குற்றச்சாட்டுகளுக்கும் என்ன மாதிரியான தண்டனை என்பதை தனித்தனியாக கொடுத்திருக்கிறார்கள்.
ஆயுள் தண்டனை
அந்த தண்டனையில் ஆயுள் தண்டனைதான் அதிகபட்சம் என்பதால் அதை மட்டும் குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கிறது. இந்த குற்றச்சாட்டுக்கு அதிகபட்ச தண்டனை இதுதான். இதை தாண்டி அவருக்கு எந்த ஒரு சலுகையும் கொடுக்கப்படக் கூடாது.
நன்னடத்தை
நன்னடத்தை காரணமாக விடுதலை செய்வது உள்ளிட்ட எந்த சலுகையும் ஞானசேகரனுக்கு கிடையாது. ஆயுள் தண்டனையை முழுமையாக அனுபவிக்க வேண்டும். தண்டனை குறைப்புக்கு கண்டிப்பாக மேல்முறையீட்டுக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது. இதை குற்றவாளிதான் முடிவு செய்ய வேண்டும்.
குற்றவாழியின் போன்
இந்த சம்பவத்தில் இன்னொரு நபர் சம்பந்தப்பட்டிருக்கிறாரா என நிறைய விவாதங்கள் எழுந்துள்ளன. எங்களை பொருத்தமட்டில் அந்த குற்றவாளியின் போன்தான் கேஸின் முக்கிய ஆயுதமாகும். அந்த போனை தடயவியல் பரிசோதனைக்கு நாங்கள் அனுப்பினோம்.
நடவடிக்கை என்ன
அந்த போனில் என்னென்ன விஷயங்கள் இருந்தன. அவரது சமூக நடவடிக்கைகள் என்னென்ன, எந்தெந்த சோஷியல் மீடியாவில் அவர் அக்கவுன்ட் வைத்திருக்கிறார்? என்பதை அறிய தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டது.
பிளைட் மோடு
அதில் குறிப்பாக, அந்த சம்பவம் நடந்த டிசம்பர் 23 ஆம் தேதி அந்த போனின் நடவடிக்கை என்ன என கண்டறியப்பட்டது. அந்த சம்பவத்தின்போது அந்த போன் Aeroplane modeல் போடப்பட்டதாக தடயவியல் துறை பரிசோதனை கூடம் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பான தடயவியல் துறை நிபுணர் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியாக சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
என்ன சிம்
ஞானசேகரனின் போன் சிம் ஏர்டெல். அந்த நிறுவனத்தின் மண்டல அதிகாரி நீதிமன்றத்திற்கு நேரடியாக வந்து டிசம்பர் 23 ஆம் தேதி மாலை 6.29 மணிக்குத்தான் முதல் அழைப்பு வந்தது. அதன் பிறகு 8.52 மணி வரை அவருக்கு எந்த போன் அழைப்பும் இல்லை. 8.52 மணிக்கு பிறகு அவருக்கு மிஸ்டு கால் அலர்ட் எஸ்எம்எஸ் வந்தது. எனவே சம்பவம் நடந்த போது ஞானசேகரன் தனது போனை ஏரோபிளேன் மோடில் போட்டிருந்தார் என்பதை அந்த அதிகாரியும் தெளிவாக தெரிவித்துவிட்டார்.
குற்றவாளி ஒருவர்தான்
ஒரு வேளை இந்த சம்பவத்தில் இன்னொரு நபர் இருக்கிறார் என நீதிமன்றம் கருதினாலும் அவரையும் இணைத்து குற்றவாளியாக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆதாரங்களை வைத்து ஒருவர்தான் குற்றவாளி என்பது தெள்ளத்தெளிவாக நிரூபிக்கப்பட்டது. இவர் மீது நடவடிக்கை எடுத்து நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
சிறப்பு புலனாய்வு குழு
இதன் பிறகும் இந்த சம்பவத்தில் வேறு ஒருவர் இருக்கிறார் என பேசினால் அது நீதிமன்ற அவமதிப்பு வழக்காகும். சிறப்பு புலனாய்வு குழுவின் புலன் விசாரணை சரியாக இருந்தது. அவர்கள் நூலிழை அளவுக்கு கூட எந்த ஆதாரத்தையும் விடவில்லை. எனவே இந்த சம்பவத்தில் ஞானசேகரனை தவிர வேறு யாருக்கும் தொடர்பில்லை. இந்த சம்பவத்தின் போது ஞானசேகரனின் போனுக்கு ஏதாவது கால் வந்ததா என கேட்ட போது அந்த பாதிக்கப்பட்ட பெண்ணே இல்லை என தெரிவித்தார்.
ஏமாற்று நாடகம்
அதாவது தானும் பல்கலைக்கழகத்தின் ஊழியர்தான் என ஏமாற்றுவதற்காக போடப்பட்ட நாடகம் என்பதை ஆதாரப்பூர்வமாக மட்டுமில்லை, அறிவியல்பூர்வமாகவும் நிரூபித்தாகிவிட்டது. பெண்கள் இது போல் துணிந்து வந்து புகார் கொடுக்க வேண்டும். அப்போதுதான் இது போல் கயவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என மேரி ஜெயந்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications