ஞானசேகரனுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும் - கொந்தளித்த தமிழிசை
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்நிலையில், யார் அந்த சார் என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை என்றும், குற்றவாளி ஞானசேகரனுக்கு தூக்குத் தண்டனை வழங்கியிருக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மாணவி புகார் அளித்த 5 மாதங்களில் இந்த வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

சிறையில் ஞானசேகரனுக்கு எந்த சலுகைகளும் வழங்கக் கூடாது. 30 ஆண்டுகள் சிறை தண்டனையை குற்றவாளி ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளனர். கூடுதலாக 90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. 11 குற்றச்சாட்டுகளிலும் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளி ஞானசேகரனுக்கு எந்த ஒரு இரக்கமும் காட்டக் கூடாது என்றும், அதிகபட்சமான தண்டனை வழங்கப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரசு சிறப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: யார் அந்த சார் என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை. குற்றவாளி ஞானசேகரனுக்கு தூக்குத் தண்டனை வழங்கியிருக்க வேண்டும். குற்றத்திற்கு பின்புலம் என்ன, உதவியது யார் என்பது போன்ற கேள்விகள் இதுவரை தொக்கி நிற்கின்றன. யார் அந்த சார் என்ற கேள்விக்கு விடை இல்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications