அண்ணா பல்கலை விவகாரம்.. எஃப்ஐஆர் வெளியானது எப்படி! தொழில்நுட்பக் கோளாறால் கசிவு.. என்ஐசி விளக்கம்!
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், IPCஇல் இருந்து BNS குற்றவியல் சட்டத்திற்கு மாறுவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் FIR கசிந்ததாக தமிழ்நாடு அரசுக்கு தேசிய தகவல் மையம் பதில் அளித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர் போலீசார்.

மேலும் இது தொடர்பாக சென்னையில் பிரியாணி கடை நடத்தி வருபவரும், திமுகவை சேர்ந்தவருமான ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு கை கால்களில் மாவு கட்டு போடப்பட்டுள்ள நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஃப்ஐஆர் லீக்:
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக மாணவியின் பெயர், விலாசம், தொலைபேசி எண் உள்ளிட்டவை அந்த எஃப்ஐஆர்-ல் இடம் பெற்று இருந்தது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக கடும் கண்டனங்களை தமிழக அரசியல் கட்சியினர் பதிவு செய்து வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி:
இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை (FIR) லீக் ஆனது. இந்த விவகாரத்தில், குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக, முதல் தகவல் அறிக்கை லாக் ஆவதில் தாமதமானதாகவும், அந்த தாமதமான நேரத்தில் ஒரு சிலர் பார்த்து, பதிவிறக்கம் செய்திருப்பதாகவும், அல்லது புகார்தாரர்கள், குற்றவாளி தரப்புக்கு அளிக்கப்பட்ட நகல் மூலமாகவும் லீக் ஆகியிருக்கலாம் என விளக்கமளிக்கப்பட்டது.
எப்படி கசிந்தது?:
இந்நிலையில், IPCஇல் இருந்து BNS குற்றவியல் சட்டத்திற்கு மாறுவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் FIR கசிந்ததாக தமிழ்நாடு அரசுக்கு தேசிய தகவல் மையம் பதில் அளித்துள்ளது. அதில்,”தேசிய தகவல் மையத்தில் எஃப்ஐஆர்-ஐ பார்வையிடும் வசதி குறிப்பிட்ட சில பிரிவுகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் போது தானாகவே பிளாக் செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக 64, 67,68,70, 79 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பதியப்படும் எஃப்ஐஆர்-ஐ பார்க்கும் வசதி எஸ்சிஆர்பி கொடுத்த வழிகாட்டுதலின்படி முடக்கப்பட்டிருக்கிறது.
என்ஐசி விளக்கம்:
இந்த நிலையில் அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கு குறித்து பதியப்பட்ட, எஃப்ஐஆர்-ஐ ஐபிசி-யில் ( இண்டியன் பீனல் கோட் ) இருந்து பிஎன்எஸ் ( பாரதீய நியான சன்ஹிதா) குற்றவியல் சட்டத்திற்கு மாற்றும் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இந்த தகவல் கசிந்து இருக்கலாம். பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் வழக்கில் பதியப்பட்ட எஃப்ஐஆர் எப்படி வெளியானது என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். மேலும் முக்கிய வழக்குகள் மற்றும் பாலியல் வழக்குகளின் எஃப்ஐஆர்களை பார்வையிடுவதை முடக்குவது குறித்து மீண்டும், தொழில்நுட்ப ரீதியாக சரி செய்ய எஸ்சிஆர்பி குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளோம்” என தேசிய தகவல் மைய மூத்த இயக்குனர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications