அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை.. பேராசிரியர் அதிரடி கைது.. மேலும் 4 மாணவிகள் புகார்
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் பேராசிரியர் ஞானவேல் பாபுவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருநெல்வேலியில் பதுங்கியிருந்தபோது அவர் போலீசாரிடம் சிக்கிய நிலையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தற்போது அந்த பேராசிரியர் மீது மேலும் 4 மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த 2024ம் ஆண்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். மொத்த தமிழகத்தையும் இந்த சம்பவம் உலுக்கிப்போட்டது. ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் தற்போது பல்கலைக்கழக மாணவிக்கு, பேராசிரியர் ஒருவரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பேராசிரியர் மீது மாணவி புகார்
இந்த புகார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் ஞானவேல் பாபு மீது அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாணவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். அதில், ''அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாபு தனக்கு நேரடியாகவும், செல்போனில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியும் பாலியல் தொல்லை அளிக்கிறார். வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டுகிறார்'' என தெரிவித்து இருந்தார்.
திருநெல்வேலியில் கைது
இந்த புகாரை தொடர்ந்து சென்னை கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். ஞானவேல் பாபு மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ஞானவேல் பாபு தலைமறைவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் திருநெல்வேலியில் வைத்து அவரை இன்று கைது செய்துள்ளனர். திருநெல்வேலியில் இருந்து அவரை போலீசார் சென்னைக்கு அழைத்து செல்கின்றனர். மாணவிகளுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதால் தற்போது அவரது செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் 4 மாணவிகள் புகார்
இதற்கிடையே தான் கைதான பேராசிரியர் ஞானவேல் பாபு இன்னும் பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 4 மாணவிகள் இன்று போலீசில் புகார் வழங்கி உள்ளனர். அந்த மாணவிகளிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் புயலை கிளப்பி உள்ளது.
சஸ்பெண்ட்
பேராசிரியர் ஞானவேல் பாபு இன்னும் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு உள்ளது. இதனால் சென்னையில் வைத்து ஞானவேல் பாபுவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே தான் ஞானவேல் பாபுவை அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. பாடம் நடத்த வேண்டிய பேராசிரியரே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications