அண்ணா பல்கலை மாணவி ஹாஸ்டல் அறையில் தற்கொலை.. போலீசாரிடம் சிக்கிய கடிதம்.. தற்கொலைக்கு காரணம் இதுவா?
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி எழுதிய கடிதம் சிக்கியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஸ்டீபன் டேவிட், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் சரோஜ் பெனிடா (21) சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வந்த சரோஜ் பெனிட்டா, விடுதியில் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி பெனிட்டாவால் சரிவர படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது. மூன்றாம் ஆண்டு படித்து வரும் பெனிட்டா மொத்தம் 11 பாடங்களில் அரியர்கள் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அறையில் தங்கியிருந்த தோழிகள் இன்று வழக்கம்போல் வகுப்புக்கு சென்று விட்டனர். இவர் மட்டும் அறையிலேயே இருந்தார்.
நண்பகல் பெனிட்டாவின் ரூம் மேட் ஒருவர் வந்து பார்த்தபோது அறை உள் பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது பெனிட்டா தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதையடுத்து, அதிர்ந்து போன மாணவி, ஹாஸ்டல் வார்டன் மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தார். கல்லூரி நிர்வாகம், போலீசாருக்கு தகவல் கொடுத்தது.
தகவல் அறிந்த கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். அதில் மாணவியின் தற்கொலைக்கு காரணமான அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.
அந்தக் கடிதத்தில் பெற்றோர் தன்னை கட்டாயப்படுத்தி பி்.ஆர்க் படிப்பில் சேர்த்தனர் என்றும் தன்னால் படிப்பில் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை என்றும், தன்னுடன் பிஆர்க்கில் சேர்ந்த சக தோழிகள் ஐந்தாம் ஆண்டு சென்று விட்டனர் என்றும் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல! உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications