சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை?
சென்னை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் பாஜக நிர்வாகி அண்ணாமலை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். அந்த ஆலோசனையின் போது கோவையில் உள்ள சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் ஆகிய இரு தொகுதிகளில் ஒன்றை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டதாக தகவல் சொல்லப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2021 சட்டசபைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4ல் மட்டுமே பாஜக வென்றது. இம்முறை 7 தொகுதிகளை பாஜக கூடுதலாக பெற்றிருக்கிறது. இதனால் பாஜக சார்பாக போட்டியிட வேண்டும் என்று சீனியர்கள் பலரும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக பாஜக நிர்வாகி அண்ணாமலையும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்திருக்கிறார். பியூஷ் கோயல் சென்னை வந்த போது கூட அண்ணாமலை வரவேற்க வரவில்லை. அதேபோல் அதிமுக உடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்ட போதும் அண்ணாமலை அங்கு வரவில்லை. கடந்த 3 நாட்களாகவே கோவையில் உள்ள தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பலரும் கோவையில் போட்டியிட வேண்டும் என்று அண்ணாமலையிடம் வலியுறுத்தினர். இந்த நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் கோவையில் உள்ள சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் ஆகிய இரு தொகுதிகளில் ஒன்றை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டதாக தகவல் தெரிய வந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பாக ஒரு மாதத்தில் தொகுதியில் பணியாற்றி வெற்றி பெற முடியுமா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார். இதனால் முன்கூட்டியே தொகுதி யாருக்கு என்பதை வேட்பாளரிடம் கூற வேண்டும் என்றும் பேசி இருந்தார். இதனால் அண்ணாமலை போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்தது. தற்போது பியூஷ் கோயலை சந்தித்திருக்கும் சூழலில், அண்ணாமலை போட்டியிட முயற்சிப்பதாக பார்க்கப்படுகிறது.
கடந்த தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் இளங்கோவிடம் தோல்வி அடைந்தார். இதன் காரணமாகவே இம்முறை கோவையில் போட்டியிட முடிவு செய்ததாக தெரிகிறது. இருந்தாலும் அதிமுக தரப்பில் பாஜகவுக்கு 2 தொகுதிகள் கோவை ஒதுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே பல்லடம் தொகுதியில் அண்ணாமலை போட்டியிடட்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications