“திமுக அரசு எனக்கே 48,000 ரூபாய் தரணும்.. வாக்குறுதியை எப்போ நிறைவேற்றுவீங்க?” - அண்ணாமலை கேள்வி
திருச்சி: “ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுப்போம் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னது. அப்படி பார்த்தால் எனக்கே இதுவரை 48,000 ரூபாய் திமுக அரசு கொடுக்க வேண்டும்” என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருச்சி மன்னார்புரத்தில் பாஜக சார்பில் நடந்த நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த விழாவில் கலந்து கொண்டார். அவருக்கு பரிவட்டம் கட்டி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரம்பரிய உடையில் அமித்ஷா வேட்டி, சட்டை அணிந்து இருந்தார். 1008 பானைகளில் பெண்கள் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.

இந்த விழாவில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசுகையில், “தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற காரணம் பாஜக. உலக வரலாற்றில் எந்தவொரு நாகரிகத்திலும் இல்லாத சிறப்பு தன்மை நமது பொங்கலுக்கு இருக்கிறது. மனித நாகரிகம், கலாசாரத்தை பார்க்கும் போது, பழையது எப்போதும் கழிந்தாக வேண்டும். புதியது எப்போதும் வர வேண்டும். நான்கு நாள் பொங்கல் விழா. தமிழர் கலாச்சாரத்தில் மட்டும் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாஜக கட்சி சில ஆண்டுகளாக நம்ம ஊரு பொங்கல் என்ற பெயரில் மக்கள் உடன் இணைந்து கொண்டாடி வருகிறது.
இது அரசியல் மேடை இல்லை. இருந்தும் நான் சொல்கிறேன். ஒரு காளை வளர்ப்பவர்களுக்கு தான், அந்த காளையை வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும். திமுக தமது தேர்தல் வாக்குறுதியில் 2021ல் சொல்லி இருந்தார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று சொல்லி இருந்தார்கள்.
நியாயப்படி, திமுக இன்றைக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்றால், மாதம் ரூ. ஆயிரம் என கணக்கு போட்டால், எனக்கே 48 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். யார் எல்லாம் காளை வளர்க்கிறார்களோ அவர்கள் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும். அப்படி சொல்லிவிட்டு 4 ஆண்டு காலம் முடிந்து விட்டது. அவர்களின் ஆட்சியே இதோ முடியப்போகிறது.
காளை வளர்க்கும் எல்லோருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று ஆட்சிக்கு வந்தது திமுக. முதல்வர் ஸ்டாலின் காளை வளர்ப்பவர்களை ஊக்குவிக்க வேண்டும். எப்போதும் மகளிருக்கு பாதுகாப்பாக இந்த அரசு இருக்க வேண்டும். இப்போது அரசு பாதுகாப்பாக இல்லாமல் இருக்கிறது. எல்லா தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். இதை இந்த பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோளாக சொல்கிறேன்.” எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications