அண்ணாமலையின் பேச்சை கேட்டால் சிரிப்பு வருது.. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன பதில்!
சென்னை: அண்ணா அறிவாலயத்தின் செங்கல்லை எடுத்துவிட்டு போவேன் என்ற அண்ணாமலையின் பேச்சு சிரிப்பை அளிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டு ஐஐடி போன்ற கல்லூரிகளில் 10 அரசுப் பள்ளி மாணவர்களே சேர்ந்த நிலையில், தற்போது 600 மாணவர்கள் சேர்கிறார்கள் என்றும் பதில் அளித்துள்ளார்.
திருவான்மியூரில் பாஜக சார்பாக நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், பாஜக தலைவராக தொடர்ந்து இருக்க முடியாது என்று எனக்கு நன்றாக தெரியும். பாஜகவை பொறுத்தவரை ஒருவரே தலைவர் பதவியில் தொடர்ந்து இருக்க முடியாது.

ஆனால் நான் இங்கு இருந்து செல்லும் போது அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விட மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். அண்ணாமலையின் இந்த பேச்சு திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தமிழக மாணவர்களுக்கான கல்வி நிதி மற்ற மாநிலங்களுக்கு திருப்பிவிடப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றிவிட்டால் எங்களின் பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தமிழக அரசும், நாங்களும் பார்த்து கொள்வோம். கடந்த காலங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஐஐடி, ஐஐஎம், தேசிய சட்டக் கல்லூரி போன்ற பெரிய இன்ஸ்ட்டிட்யூட்களில் சேர்வது அதிசயமான நிகழ்வாக இருந்தது.
2021ஆம் ஆண்டு 10 பேர் மட்டும்தான் இதுபோன்ற கல்லூரிகளில் சேர்ந்தனர். தற்போது 600 பேர் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் சேர்த்திருக்கிறார்கள். அது பள்ளிக்கல்வித்துறையின் சாதனையாக பார்க்கிறோம். மத்திய அரசு நமக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில், கூடுதலாக சிறப்பாக செயல்பட முடியும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பட்ஜெட் குறித்து அமைச்சர்களின் கருத்தை அண்ணாமலை விமர்சித்தது தொடர்பான கேள்விக்கு, கிட்டத்தட்ட ரூ.6.23 லட்சம் கோடி நமது வரிப்பணம் சென்றிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் ஜிஎஸ்டி, மறைமுக வரி என்று கொடுத்துள்ளோம். இந்த ரூ.6.23 லட்சம் கோடியில் எவ்வளவு தமிழ்நாட்டிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.
இதன் காரணமாகதான் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வடக்கில் இருப்பது வடக்கில் இருக்கும் அரசா அல்லது வட்டிக்கடை நடத்தும் அரசா என்று கேள்வி எழுப்பினார். அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லை பெயர்த்து எடுத்துவிட்டுதான் போவேன் என்ற அண்ணாமலையின் பேச்சு சிரிப்பை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications