டிஜிபி ஐயா.. என் மனைவியை அரை நிர்வாணமாக்கி அடிக்கிறாங்க.. கெஞ்சிய ராணுவ வீரர்! பொங்கிய அண்ணாமலை
சென்னை: திருவண்ணாமலையை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவி மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி இருக்கிறார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த படவேடுவை சேர்ந்தவர் பிரபாகரன், இந்திய ராணுவத்தின் ஹவில்தாராக காஷ்மீரில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், 120 பேர் சேர்ந்து தன்னுடைய மனைவியை அரை நிர்வானமாக்கி தாக்கியதாக குற்றம்சாட்டி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு அறநிலையத்துக்கு சொந்தமான இடத்தில் தன்னுடைய மனைவி வைத்து இருக்கும் நிலையில், கடையை அடித்து நொறுக்கி, தன்னுடைய மனைவியையும் கொடூரமாக தாக்கி காது மூக்கில் ரத்தம் வழிந்தோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவர் வேதனையுடன் தெரிவித்து இருந்தார். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபிக்கு மண்டியிட்டு கோரிக்கை விடுத்து உள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா படவேடு கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஹவில்தார் திரு பிரபாகரன் அவர்கள், தனது மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது, 120க்கும் மேற்பட்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளியிட்டுள்ள காணொளி கண்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தும், தீர விசாரிக்காமல், பூசி மெழுகப் பார்க்கிறது காவல்துறையின் விளக்கம். இந்தத் திறனற்ற திமுக அரசு, பிரிவினைவாதிகளுக்கும் சமூக விரோதிகளுக்கும் மட்டுமேயான அரசாக இருக்கிறது, சாதாரணப் பொதுமக்களுக்கான அரசாக இல்லை.
இவர்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ராணுவ வீரரை அடித்துக் கொல்வதும், அவர்கள் குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுப்பதும், கடுமையான நடவடிக்கை இன்றி, மிகச் சாதாரண நிகழ்வாகக் கடந்து செல்கிறது. தங்கள் சுக துக்கங்களைத் தொலைத்து, தேசத்தைப் பாதுகாக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு, நன்றி கொன்ற அரசாக இருக்கிறது திமுக அரசு.
காஷ்மீர் எல்லையில் பணியில் உள்ள ராணுவ வீரர் ஹவில்தார் திரு பிரபாகரன் அவர்களது மனைவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை, இந்தக் கையாலாகாத திமுக அரசு உணர வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications