விஜய் கேட்டது சரிதானே! கேட்டா பாஜக பி-டீம்னு சொல்லுவாங்க! தவெக விஜய்க்கு ஆதரவாக வந்த அண்ணாமலை
சென்னை: நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் டிடிவி தினகரனுடன் தான் பேசியது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார் அண்ணாமலை. மேலும் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து விஜயின் கருத்தை தான் வரவேற்பதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்ட நிலையில் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். அதிலிருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரச்சனை வெடித்தது. எடப்பாடி பழனிச்சாமிக்கு நயினார் நாகேந்திரன் முக்கியத்துவம் தருவதாக கூறி ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கின்றனர்.
இதனை அடுத்து அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று திடீரென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார்.

அண்ணாமலை
சுமார், மூன்று மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் டிடிவி தினகரன் மீண்டும் கூட்டணிக்கு வரவேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியதாக சொல்லப்பட்டது. இந்த சந்திப்பு தொடர்பாக பல்வேறு யூகங்கள் கிளம்பிய நிலையில் அண்ணாமலையே விளக்கம் அளித்திருந்தார். இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," தமிழக அரசியல் நிலவரம் குறித்து தினகரன் இடம் பேசினேன். அவர் மீண்டும் இந்திய கூட்டணிக்கு வர வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறேன். எனது கோரிக்கையை ஏற்பதும் நிராகரிப்பதும் டிடிவி தினகரன் அவர்களின் விருப்பம். அரசியலில் நிரந்தர எதிரி இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை. நாங்கள் பேசியதில் வேறு எந்த விஷயமும் இல்லை. இன்னும் தேர்தலுக்கு காலம் இருக்கிறது. காத்திருப்போம்" என்றார்.
முதல்வர் ஸ்டாலின்
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அண்ணாமலை பதிலளித்தார். அப்போது முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து விஜய் விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அண்ணாமலை," முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து விஜயின் கருத்தை தான் வரவேற்கிறேன். தமிழகத்தில் யாராவது குரல் கொடுத்தால் உடனே அவர்கள் பாஜகவின் பி-டீம் என கூறுகிறார்கள். முதல்வரின் பயணத்தில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் எத்தனை என்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இப்போது கப்பல் கட்டும் தளம் அமைப்பதாக கூறுகிறார்கள்.
விஜய்
அதற்கான மத்திய அரசின் நிதியை மறைப்பது ஏன் என தெரியவில்லை. தற்போது முப்பதாயிரம் கோடி முதலீடு செய்யும் இரண்டு நிறுவனங்களும் மத்திய அரசின் நிறுவனங்கள். அதனை சொல்வதில் திமுக அரசுக்கும் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கும் ஏன் தயக்கம் என தெரியவில்லை. மத்திய அரசு நிறுவனத்தை தனியார் நிறுவனம் எனக் கூறி எத்தனை நாட்கள் தான் வண்டி ஓட்ட முடியும்?" என கேள்வி எழுப்பி உள்ளார்.
என்ன பேசினார் விஜய்?
கடந்த சனிக்கிழமை நாகையில் மக்களை சந்தித்த தவெக தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து சாடி இருந்தார். அது வெளிநாட்டு முதலீடா? அல்லது வெளிநாடுகளில் முதலீடா? என்று விஜய் கேள்வி எழுப்பி இருந்தார். திமுக குடும்பத்தின் சொத்துக்கள் முதலீடாக வெளிநாடுகளுக்கு செல்கிறதா? என்ற சந்தேகத்தையும் வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications