அண்ணாமலை பொறுப்பில் இருந்து விலகல்.. 2 காரணங்களை சொல்லும் பாஜக சீனியர்கள்!
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்திருப்பது தமிழக பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையின் அறிவிப்புக்கு பின் கமலாலய சீனியர்கள் சில காரணங்களை அடுக்குகின்றனர். இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை இறக்கப்பட்ட நாள் முதலே, அவர் ஒரு வகையான அதிருப்தியுடன் செயல்பட்டு வந்தார். முதலில் பாஜக கூட்டணி ஆட்சி என்று அதிமுகவை வம்பிழுத்த அண்ணாமலை, பின்னர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவோம் என்று அமித்ஷா முன்னிலையில் கூற சமரசமானார். இதன்பின் நயினார் நாகேந்திரனுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வந்தது.

அதேபோல் தமிழக பாஜக தலைவராக இருந்த போது மாவட்ட நிர்வாகிகள் பதவிக்கு கொண்டு வரப்பட்ட அண்ணாமலை ஆதரவாளர்கள், கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு வந்தனர். அதேபோல் வார் ரூம் என்ற பெயரில் அண்ணாமலை செய்த சம்பவங்களை பட்டியலிட்டு அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரன் சமர்ப்பித்தார். இதுவும் அண்ணாமலைக்கு எதிராக திரும்பியது.
இதனால் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது அண்ணாமலைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. அதேபோல் தமிழக பாஜக சார்பாக அமைக்கப்பட்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிலும் அண்ணாமலை இடம்பெறவில்லை. தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பெயர் இடம்பெற்ற போதும், அண்ணாமலை பெயர் இடம்பெறவில்லை.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருந்த போதே நயினார் நாகேந்திரனுடன் சுமூக உறவு இருக்கவில்லை. தற்போது தலைவரான பின் அண்ணாமலையை நயினார் நாகேந்திரன் கட்டம் கட்டியதாக தெரிய வந்தது. குறிப்பாக அண்ணாமலை தலைவராக இருந்த போது கேடி ராகவன் பதவியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார். ஆனால் நயினார் நாகேந்திரன் வந்த பின், மீண்டும் பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.
அதேபோல் அண்மையில் மோடி தமிழ்நாடு வந்த போதும், அதன் வரவேற்பு குழுவில் அண்ணாமலை இடம்பெறவில்லை. அதுமட்டுமல்லாமல் மோடி வருகைக்கு முன்பாகவே அண்ணாமலையின் மேடைப் பேச்சு திட்டமிடட்டப்பட்டது. இதன் காரணமாகவே பிரதமர் விழாவிலும் கூட அண்ணாமலை ஒதுங்கியே இருந்தார். இப்படியான சூழலில் அண்ணாமலையை 6 தொகுதிகளுக்கான பொறுப்பாளராக நயினார் நாகேந்திரன் நியமித்தார்.
ஆனால் அந்த பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகி இருக்கிறார். இதற்கு டெல்லியின் பார்வை அண்ணாமலை பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கமலாலய சீனியர்கள் கூறுகின்றனர். இன்னொரு பக்கம் அண்ணாமலையை டெல்லி பாஜகவும் கைவிட்டதாக முனுமுனுக்கிறார்கள். ஆனால் கூட்டணி பிடிக்கவில்லை, தலைமைப் பிடிக்கவில்லை.. அதனால் தேர்தல் பணியை செய்ய மாட்டேன் என்று அண்ணாமலை மறைமுகமாக கூறியதை டெல்லி வேடிக்கை பார்க்குமா என்பதே கமலாலயத்தின் கேள்வியாக உள்ளது.












Click it and Unblock the Notifications