பாஜக தனித்து போட்டியா? 'அண்ணாமலைக்கு அதிகாரம் இல்லை'.. ஈபிஎஸ் ஆதரவாளர் சுரேஷ் கண்ணன் காட்டம்
"பாஜக தனித்து போட்டியிடும் என சொல்ல அண்ணாமலைக்கு அதிகாரம் இல்லை" என ஈபிஎஸ் ஆதரவாளர் சுரேஷ் கண்ணன் கூறியுள்ளார்.
சென்னை: "பாஜக தனித்து போட்டியிடும் என சொல்ல அண்ணாமலைக்கு அதிகாரம் இல்லை" என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் சுரேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, " தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு இருக்கிறேன்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் வருகிற மே மாதம் 10-ந்தேதி வரை கட்சி பணிகளில் 'பிஸி'யாக இருப்பேன். வருகிற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி என்று முடிவு எடுத்தால், எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன். சாதாரண தொண்டனாகவே கட்சி பணிகளை செய்வேன்" என்றார்.

அதிமுகவினர் உற்சாகம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு பாஜகவிலேயே எதிர்ப்பு எழுந்தள்ளது. இந்நிலையில் அதிமுகவினர் அண்ணாமலையின் கருத்தை வரவேற்று பேசி வருகிறார்கள்.பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்காவிட்டால் மிகவும் நல்லது என்றே அதிமுகவினர் சமூக வலைளதங்களில் கூறிவருகிறார்கள். அத்துடன் அண்ணாமலையையும் விமர்சித்து வருகிறார்கள்,

டெல்லி மேலிடம்
அதிமுக உடன் கூட்டணி வேண்டாம் என்று அண்ணாமலை கூறியது குறித்து எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரான சுரேஷ் கண்ணன் பிரபல தமிழ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், " இது அவரது சொந்தக்கருத்தாக இருக்குமோ என்று நினைக்கிறேன். கட்சியை பலப்படுத்துவதற்காக, கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்துவற்காக பேசியிருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் அண்ணாமலைக்கு கிடையாது. கூட்டணி முடிவெடுப்பது டெல்லியில் இருக்கும் தேசிய தலைமை தான்.

பாஜகவால் பாதிப்பு
இவர்கள் கருத்துத்தான் கூற முடியும். கருத்துக்கூறக்கூடிய தலைவர் இடத்தில் அண்ணாமலை இருக்கிறார். ஆனால் அவருக்கான மரியாதையும் டெல்லி தலைமை கொடுக்கும். ஆனால் தனித்து போட்டியிட வேண்டும் என்று தொண்டர்களிடம் அரசியல் ரீதியாக பேசியது , கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்துவதற்காக பேசியிருக்கிறாரா என்பது தெரியவில்லை. அதிமுகவால் பாஜகவினர் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்றால் நிச்சயம் கிடையாது. ஆனால் பாஜகவால் அதிமுக தான் பாதிக்கப்பட்டிருக்கிறது. பாஜகவால் அதிமுகவிற்கு எந்த வளர்ச்சியும் கிடையாது. இது பாஜகவினருக்கும் தெரியும்.

பின்னணி என்ன
பாஜகவினரால் தான் சிறுபான்மையினர் ஓட்டுக்களை இழந்தோம் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூட சொல்லியிருக்கிறார். அதனால் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் அண்ணாமலைக்கு கிடையாது. கூட்டணி என்று முடிவு எடுத்தால், எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று அண்ணாமலை கூறியதன் பின்னணியில் ஏதாவது இருக்கலாம்.அவர் மனதில் ஏதாவது இருக்கலாம். ஆனால் அப்படி ஒரு முடிவை டெல்லி தலைமை எடுக்குமா என்பது யாருக்கும் தெரியவில்லை.

சுரேஷ் கண்ணன்
அண்மையில் நடந்த பிரச்சனையின் போது, டெல்லி தலைமை சில கருத்துக்களை கூறியதன் அடிப்படையில் அந்த கலகம் அப்படியே நின்றனது. அதிமுகவுடன் எந்த பிரச்சனையும் இல்லை என்று பாஜகவினரும் அப்போது சொல்லிவிட்டார்கள். எனவே அண்ணாமலை பேசியது அவரது சொந்தக்கருத்தாகவே இருக்கும் என்று நான் நினைக்கிறேன்" இவ்வாறு இபிஎஸ் ஆதரவாளர் சுரேஷ் கண்ணன் கூறினார்.

தனிப்பட்ட கருத்து
இதனிடையே பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், "கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை சொல்வது அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். எங்களை பொறுத்தவரை தேசியத் தலைமை சொல்வது தான் இறுதி முடிவு. தமிழகத்தில் யாரும் தனித்து போட்டியிடுவதில்லை என்றார்.












Click it and Unblock the Notifications