பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்!
சென்னை: பாஜகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் அறிவித்துள்ளார். பாஜகவை மக்களிடம் கொண்டு சென்றவர் அண்ணாமலை என்று கூறிய கரு நாகராஜன், அண்ணாமலையின் இயக்கத்தில் இணைவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தமிழ்நாட்டில் பாஜகவின் சரிவு அண்ணாமலை மூலமாக தொடங்கிவிட்டதாக பார்க்கப்படுகிறது.
பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ள சூழலில், கட்சியின் மிக முக்கிய மூத்த முகமாக விளங்கிய கரு நாகராஜனின் இந்த வெளியேற்றம் தமிழக பாஜக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமது ராஜினாமா குறித்துச் செய்தியாளர்களிடம் கரு நாகராஜன் பேசுகையில், தமிழகம் முழுவதும் பாஜகவை கொண்டு சென்றவர் அண்ணாமலை.

பாஜகவில் இருந்து விலகும் போது கூட கண்ணியமான முறையில் டெல்லி தலைமையிடம் கூறிவிட்டு விலகி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து அண்ணாமலை தொடங்கியுள்ள இயக்கத்தில் இணைந்துள்ளதாகவும் கரு நாகராஜன் உறுதி செய்துள்ளார். பாஜகவின் மாநில துணைத் தலைவராக இருந்தவர் கரு நாகராஜன்.
தமிழிசை செளந்தரராஜன், எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோருடன் நெருங்கிய நட்புடன் இருந்த கரு.நாகராஜன், அவர்களுக்கு கீழ் பணியாற்றி இருக்கிறார். தற்போது அடையாளம் கொடுத்த பாஜகவில் இருந்து விலகி, அண்ணாமலை பக்கம் சாய்ந்துள்ளார். ஏற்கனவே அண்ணாமலையின் இயக்கத்தில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் பாஜக மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தான். கரு நாகராஜனை பொறுத்தவரை ஆரம்பத்தில் நடிகர் சரத்குமார் தொடங்கிய அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் மிக முக்கிய நிர்வாகியாக இருந்தார். அக்கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்து, கட்சியின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றினார்.
பின்னர் சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பாஜக சார்பில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார். தொலைக்காட்சி விவாதங்களிலும், பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் பாஜாகவின் கருத்துக்களை முன்வைக்கும் முதன்மை ஊடக முகங்களில் ஒருவராக வலம் வந்தார்.












Click it and Unblock the Notifications