அண்ணாமலைக்கு மிட்நைட்டில் வந்த சந்தேகம்.. விஐபி ரகசிய சந்திப்பு! சபரீசன் கோவை விசிட் பின்னணி இதுதானா
சென்னை: தமிழகத்தில் தேர்தல் கிட்ட நெருங்கிவிட்டது.. அரசியல் கட்சிகள் அனைவரும் படு பிஸியாக களத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.. இப்படி தமிழக அரசியல் களமே தகித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், கோவையில் நேற்று இரவு நடந்த ஒரு முக்கியச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை ரகசியமாக நடத்தியிருக்கும் இந்த முக்கியமான சந்திப்பு குறித்து, நமக்கு பிரத்யேக தகவல் ஒன்று கிடைத்துள்ளது..!!
அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாகக் கருதப்படும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் நேருக்கு நேர் சந்தித்து பேசியிருக்கிறார்கள்..

கோயம்புத்தூர் அரசியல்
நேற்றிரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த ரகசிய ஆலோசனையில், தேர்தல் வியூகங்கள் மற்றும் கள நிலவரங்கள் குறித்து மிக விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் பின்னணியில் மிக முக்கியமான ஒரு காரணம் இருப்பதாகத் தெரிகிறது.. கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளரும், தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.,, இதனால் தேர்தல் முடியும் வரை அவரால் நேரடியாக பிரச்சாரக் களத்திற்குத் திரும்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது.
அண்ணாமலைக்கு டவுட்
இதனால், வானதி சீனிவாசனின் உடல் நலம் குறித்தும், அவருக்கு பதிலாக அந்தத் தொகுதியில் தேர்தல் பணிகளையும் பிரச்சாரத்தையும் தொய்வின்றி யார் முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்தும் அண்ணாமலையிடம் வேலுமணி விரிவாக கேட்டாராம்..
அதுமட்டுமல்லாமல், கோவையில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளின் கள நிலவரம் குறித்து இருவரும் தீவிரமாக விவாதித்திருக்கிறார்கள். அப்போது, நடிகர் விஜய்யின் தவெக ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்தும் இருவரும் விவாதித்தார்களாம்.
அண்ணாமலை வேலுமணியிடம், "ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 10,000 வாக்குகளை விஜய் பிரிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் கிடைக்கிறது. ஆனால், அந்த வாக்குகள் நம்முடைய வெற்றியைப் பாதிக்குமா அல்லது திமுகவின் வாக்குகளைப் பிரிக்குமா என்பதுதான் குழப்பமாக இருக்கிறது" என்று தன்னுடைய சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
திமுக ஓட்டு பிரியுமா?
உடனே இதற்கு எஸ்.பி.வேலுமணி, களத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட சில எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை அண்ணாமலையிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்..
"நீங்கள் யோசிப்பது கரெக்ட் தான்.. ஆனால் நான் விசாரித்த வரை, அந்த வாக்குகள் கடந்த தேர்தலில் திமுகவுக்கு விழுந்தவை என்பது உறுதியாகியுள்ளது. விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் நமது ஆட்கள் தகுந்த முறையில் பேசி இந்தத் தகவலைக் கறந்துள்ளனர்.
குறிப்பாக, த.வெ.க. ஆதரவாளர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு வரும் நபர்களிடம், 'கடந்த தேர்தலில் நீங்கள் யாருக்குப் போட்டியிட்டீர்கள்?' என்ற கேள்வியை அந்த நிர்வாகிகள் முன்வைத்து பதிவு செய்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் திமுக என்றே பதில் சொல்லியிருக்கிறார்கள்.. இதனால் நமக்கும் சிறிய பாதிப்பு இருக்கலாம், ஆனால் திமுக தான் மிகப்பெரிய சரிவை சந்திக்கும். நமது வாக்கு வங்கி சிதறாமல் உறுதியாக இருக்கிறது" என்று அண்ணாமலையிடம் வேலுமணி விவரித்துள்ளார்.
சபரீசன் கோவை விசிட் பின்னணி
வேலுமணியின் இந்த விளக்கத்தை ஆமோதித்த அண்ணாமலை, "ஓ.. அதனால்தான் சபரீசன் கோவைக்கு வந்திருக்கிறாரா?" என்று கிண்டலாகக் கமெண்ட் அடித்துள்ளார். இப்படி திமுக முகாமில் நிலவும் பதற்றத்தை இருவரும் சூசகமாகப் பரிமாறிக்கொண்டுள்ளனர்..
கடைசியாக, தேர்தலுக்கு முந்தைய பணப்பட்டுவாடா குறித்தும் பேசப்பட்டுள்ளது. திமுக தரப்பு சில நூதன முறைகளைக் கையாண்டு பணத்தை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதனை எந்தெந்த வழிகளில் தடுத்து நிறுத்துவது என்பது குறித்தும் இருவரும் ஒரு மணி நேர ஆலோசனையின் முடிவில் தீர்க்கமான முடிவுகளை எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. ஆக மொத்தம் 2 சீனியர் தலைவர்களின் சந்திப்பு கோவை தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
- எழில்














Click it and Unblock the Notifications