பாஜக தலைமை மீது அதிருப்தியா? டெல்லி மீட்டிங்குக்கு போகலையே! அண்ணாமலை கொடுத்த விளக்கம்
சென்னை: டெல்லியில் நேற்று தமிழ்நாடு பாஜக தலைவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தியிருந்தார். இதில் அண்ணாமலை பங்கேற்கவில்லை. இந்நிலையில் பாஜக தலைமை மீது அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
சொந்த காரணங்களுக்காகவே டெல்லி போகவில்லை என்று விளக்கமளித்திருக்கும் அண்ணாமலை, கூட்டணியில் சலசலப்பு இருக்கிறது என்றும், அது விரைவில் சரி செய்யப்படும் என நம்புவதாகவும் கூறியிருக்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது, "வேறு வேறு மனோபாவம் இருக்கக்கூடிய, சித்தாந்தம் இருக்கக்கூடிய குழுக்கள் என்டிஏ கூட்டணியில் இருக்கும்போது, பொதுவான நோக்கம் என்ன? திமுக தலைமையிலான ஆட்சியை 2026ல வீட்டுக்கு அனுப்பனும் அப்படிங்கறதுதான். பல குழுக்களால் பிரச்சினைகள் இருக்கிறது. இல்லை என நான் சொல்லவில்லை. ஆரம்பத்திலிருந்து இருக்கக்கூடிய பிரச்சனைகள்தான். அதெல்லாம் வருகின்ற காலத்தில் சரியாகும் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது.
டிடிவி மற்றும் ஓபிஎஸ் பெருந்தன்மை மிக்க அரசியல்வாதிகள். அவர்கள் இருவருடைய அன்பையும் நான் பெற்றிருக்கின்றேன். ரொம்ப நெருக்கமா அவர்களிடம் நான் பேசக்கூடிய ஒரு மனிதன். நிச்சயமாக நல்ல ஒரு கூட்டணி அமைக்க அவங்க மறுப்பர்சீலனை செய்வார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
அதேபோல செங்கோட்டையன் நாளை மனம் திறந்து பேசுவதாக கூறியிருக்கிறாரே, அது அதிமுகவில் பிளவை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை,
"நான் யூகங்களுக்கு எப்படிங்க சொல்லுவேன்? யுகங்களுக்கு நான் பதில் அளிக்க முடியாது. ஏதாவது நடந்தால் நடந்துவிட்டது என்று கேளுங்கள் நான் பதில் சொல்றேன். டிடிவி முடிவை பற்றி கேட்டீர்கள் பதில் சொன்னேன்" என்று கூறியுள்ளார்.
அதேபோல டெல்லி கூட்டம் குறித்து எழுப்பப்பட்ட கெள்விக்கு, "என்னை பார்த்தால் தலைமையுடன் அதிருப்தியில் இருப்பதை போலவா தெரிகிறது? வேலை பளு காணரமாக போகவில்லை. தொண்டர்கள் வந்து நேரம் கேட்கிறார்கள். தலைவராக இருந்த பொழுது நீங்க நேரம் கொடுக்கல, விசேஷத்துக்கு வரல இன்னைக்கு நீங்க வாங்க என தொண்டர்கள் அழைக்கிறார்கள். அவர்களுக்கு மதிப்பளிக்கணும். அதே நேரத்துல கட்சி தலைவர்களுக்கு நான் முறையாக தெரியப்படுத்தி இருந்தேன். அமித்ஷா ஜிக்கு போன் மூலம் தகவல் சொல்லியிருந்தேன்" என்று கூறியிருந்தார்.
நேற்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் உட்கட்சி பூசல், வார் ரூம் அரசியல், தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம், கட்சியின் வளர்ச்சிக்கு புதிய யோசனை, உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எச்.ராஜா, வானதி சீனிவாசன், உள்ளிட்ட நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications