என்.டி.ஏ கூட்டணியில் விஜய்? "கேப்டனும் கோச்சும் முடிவு பண்ணுவாங்க".. அண்ணாமலை பரபரப்பு கருத்து!
சென்னை: "விஜய்யை கூட்டணியில் சேர்ப்பது குறித்து NDA அணியின் கோச் மற்றும் கேப்டன் முடிவு செய்வார்கள். நான் வெறும் பார்வையாளன். இந்திய கிரிக்கெட் அணி போல என்.டி.ஏ கூட்டணி வலிமையாக உள்ளது. அதே நேரம் வலிமையாக உள்ளவர்களை அணியில் சேர்க்க வேண்டும் என்பதே எனது கருத்து" என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டு வர நீங்கள் முயற்சி மேற்கொண்டதாகவும், டிடிவி தினகரன் அமித் ஷாவை சந்தித்ததாகவும் தகவல் வருகிறதே எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, "2026 சட்டசபை தேர்தல் 4 முனை போட்டியை சந்திக்க உள்ள தேர்தல். சீமானை யாரும் லேசாக எடை போட வேண்டாம். கொள்கைக்காக நிற்கிறார். அவரது கொள்கை எனக்குப் பிடிக்குமோ, பிடிக்காதோ அது இரண்டாம் பட்சம். ஆனால், தேர்தலுக்கு தேர்தல் நிற்கிறார். அதுவும் வலிமையான அரசியல் கட்சி. விஜய் வலிமையாக களத்திற்கு வந்துள்ளார்.
என்.டி.ஏ கூட்டணியை பொறுத்தவரை வலிமையும் உண்டு, அனுபவமும் உண்டு. திமுக, பிராந்தியக் கட்சிகளில் மிகப் பழமையான முக்கியமான கட்சி, வலிமையான கட்சி. எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான 4 முனை போட்டி நிலவுகிறது. எனவே ஒவ்வொரு ஓட்டும் முக்கியம், ஒவ்வொரு கட்சியும் முக்கியம். கூட்டணி வலிமையாக இருக்க வலிமையான கட்சிகளை இணைக்கலாம்.
இந்திய கிரிக்கெட் அணி வலிமையாக உள்ளது. நல்ல பிளேயர் இருந்தால் வரட்டும், கோலி மட்டும் இருந்தால் போதும் என்று நினைக்க முடியாது. நல்ல பிளேயர்கள் கிடைக்கும்போது டீமை வலிமையாக்க அவர்களை சேர்த்துக் கொள்ளலாம். எவ்வளவுக்கு எவ்வளவு வலிமையாக இருக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.
விஜய்யை கூட்டணியில் சேர்ப்பது குறித்து NDA அணியின் கோச் மற்றும் கேப்டன் முடிவு செய்வார்கள். நான் வெறும் பார்வையாளன். யார் சேரவேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிப்பார்கள். இந்திய கிரிக்கெட் அணி போல என்.டி.ஏ கூட்டணி வலிமையாக உள்ளது. அதே நேரம் வலிமையாக உள்ளவர்களை அணியில் சேர்க்க வேண்டும் என்பதே எனது கருத்து" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அண்ணாமலை பேசுகையில், "பராசக்தி அனைவரும் பார்க்க வேண்டிய படம். காங்கிரஸ் கட்சியைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய படம். காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்தை பராசக்தி படம் காட்டியுள்ளது. பராசக்தி மூலம் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆப்பு வைத்துள்ளது. காங்கிரஸின் துரோகத்தை புரிந்துகொண்டு அவர்களுக்கு யாரும் ஓட்டுப் போடக்கூடாது. ஜனநாயகன் திரைப்படத்திற்காக நானும் ஆவலுடன் காத்திருந்தேன்.
பராசக்தி திரைப்படத்தை பார்த்துவிட்டேன். அதனால் கருத்து சொல்கிறேன். ஜனநாயகன் திரைப்படத்தையும் பார்த்துவிட்டு என்னுடைய கருத்தை நிச்சயம் சொல்வேன். தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். நிறைய குறைகளும் கொஞ்சம் நிறைகளும் கொண்ட ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications