அன்று ராமநாதபுரம் எம்பி சிக்கன் பிரியாணி சாப்பிட்ட போது! கோயில் EO எங்கே போனார்? அண்ணாமலை கேள்வி
சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுமாறு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்ட போது, தர்கா நிர்வாகத்தினர் அமைதியாக இருந்த போது, கோயில் செயல் அலுவலர் மேல்முறையீடு செய்தது ஏன்? என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை திநகரில் பாஜக தலைமை அலுவலகத்தில் முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் மலை முழுவதும் இந்துக்களுக்கு சொந்தமானது.

சிக்கந்தர் தர்கா, நெல்லித்தோப்பு, தர்காவுக்கு செல்லும் பாதை ஆகிய 3 இடங்கள் மட்டுமே தர்கா நிர்வாகத்திற்கு சொந்தமானது. 2014, 2017 ஆம் ஆண்டுகளில் வெளியான தீர்ப்புகளை அமைச்சர் ரகுபதி திரித்து உண்மைக்கு புறம்பாக பேசுகிறார்.
தர்காவில் இருந்து 50 மீட்டரில் உள்ள தீபத்தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என 1ஆம் தேதி ராமரவிக்குமார் கோர்ட்டுக்கு சென்றார்.
அப்போது மதுரை கிளை நீதிமன்றத்தில், தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நியாயபடி பார்த்தால் தங்களுக்கு ஆட்சேபம் இருந்தால் தர்கா நிர்வாகம்தான் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.
தர்காவுக்கு பக்கத்தில் இருக்கும் தூணில் விளக்கேற்றினால் எங்கள் மனம் புண்படும் என அவர்கள்தான் தீபத் தூணில் தீபம் ஏற்ற எதிர்ப்பு கூறியிருக்க வேண்டும். ஆனால் கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய கோயில் செயல் அலுவலர் மேல்முறையீடு செய்தார். திமுக அரசின் அழுத்தத்தின் காரணமாகவே அவர் மேல்முறையீடு செய்திருக்கிறார்.
சிக்கந்தர் தர்கா இருப்பதால் சிக்கந்தர் மலை என திமுக அரசு பெயரிட்டு ரசித்தது. சிக்கந்தர் மலை என பெயரிட்டதால் ராமநாதபுரம் எம்பி அங்கு போய் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட போது இந்த திமுக அரசும், கோயில் செயல் அலுவலரும் எங்கே போயிருந்தார்கள்.
பக்தர்கள்தான் ராமநாதபுரம் எம்பியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். திருப்பரங்குன்றத்தில் மோசடியாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரனையும் எச் ராஜாவையும் கைது செய்தது ஏன் என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications