இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்.. நயினார் நாகேந்திரனிடம் சொன்ன அண்ணாமலை.. என்ன நடந்தது?
சென்னை: சட்டசபைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முக்கிய நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு நயினார் நாகேந்திரன் பேசி வருவதாக கூறப்படுகிறது. அப்போது அண்ணாமலையை தொடர்பு கொண்டு நயினார் நாகேந்திரன் பேசிய போது, இவ்வாறு கூறி இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், பாஜக சார்பாகத் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணி அமைத்திருக்கும் நிலையில், 2 நாட்களுக்கு முன்பாக புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை நயினார் நாகேந்திரன் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் தமிழக பாஜக தரப்பில் மாநாடு நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 17ல் நெல்லை தொடங்கி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாவட்டத்தில் மாநாடு நடக்க உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிவுறுத்தலின் பெயரில் பாஜக இந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேபோல் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை நேரடியாக அமித்ஷாவே மேற்கொண்டு வருகிறார்.
அதேபோல் அதிமுகவிடம் இம்முறை 40 தொகுதிகளை வரை கோர பாஜக திட்டமிட்டு வருகிறது. ஏனென்றால் அமமுகவுக்கு உள் ஒதுக்கீடு மூலமாக சில தொகுதிகளை ஒதுக்க வேண்டிய தேவை இருக்கிறது. இதனால் அமமுகவுக்கும் சேர்த்தே அதிமுக சார்பாக பாஜகவுக்கு தொகுதிப் பங்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக பாஜக தரப்பில் வேட்பாளர்களைத் தயார் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தரப்பில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். யார் யாருக்குத் தேர்தலில் போட்டியிட விருப்பம் என்பதை உறுதி செய்துவிட்டு பட்டியலைத் தயார் செய்ய முடிவு எடுத்திருக்கிறார்.
அதன்படி நயினார் நாகேந்திரன் பேசிய போது, அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்று கூறியதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலமாக அண்ணாமலை நேரடியாகத் தேசிய பொறுப்புக்கு கொண்டு செல்லப்படுவார் என்றும் பார்க்கப்படுகிறது. அண்ணாமலைக்கு தேசிய அளவில் பிஎல் சந்தோஷ் ஆதரவு இருந்து வரும் சூழலில், இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் என்று 2 முறை இதுவரை அண்ணாமலை தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார். 2021 சட்டசபைத் தேர்தல் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை 68,553 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். அதேபோல் மக்களவை தேர்தலில் 4,26,902 வாக்குகளை பெற்று திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications