சரிபாதி சீட்டில் பாஜக நிற்கணும்.. கணக்கையே மொத்தமா மாத்தணும்.. மோடிக்கு யோசனை சொன்ன அண்ணாமலை!
சென்னை: வரும் 2026 சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைய வேண்டுமென்றால், அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் சரிபாதி தொகுதியில் பாஜக போட்டியிட வேண்டும் என யோசனை தெரிவித்து பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.
அண்மையில் மதுரையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமையப்போகிறது எனப் பேசி இருந்தார்.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி
வரும் சட்டசபை தேர்தலில், அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என அதிமுக தலைவர்கள் கூறி வரும் நிலையில், 2026ல் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி தான் அமையும் என அமித்ஷா மீண்டும் உறுதியாகப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, 2026 சட்டசபை தேர்தல் கூட்டணி சீட் பங்கீடு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோடிக்கு அண்ணாமலை கடிதம்
அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில், அமித் ஷா, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் எனப் பேசியதில் பாஜகவினர் அனைவருக்கும் மகிழ்ச்சி. ஆனால், இங்கு கூட்டணி ஆட்சி அமைக்கப்பட வேண்டுமானால், சமீபத்தில் பாஜக பெற்றுள்ள வாக்கு சதவீத அடிப்படையில், தொகுதி பங்கீடு அமைய வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில், அதிமுக கூட்டணிக்கு, 19.4 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. அதேநேரத்தில், பாஜக கூட்டணி, 11.4 சதவீதம் வாக்குகள் பெற்றது. சில தொகுதிகளில் அதிமுகவை 3வது இடத்துக்கு தள்ளி பாஜக இரண்டாம் இடம் பிடித்தது. மதுரை, கோவை உள்ளிட்ட பல முக்கிய தொகுதிகளிகும் பாஜக, அதிமுகவை விட அதிக ஓட்டுகள் வாங்கியது.
சரிபாதி தொகுதிகளில் பாஜக நிற்க வேண்டும்
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக இரண்டாம் இடம் பிடித்தது. அதிமுக நான்காவது தள்ளப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் பாஜகவின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன எனக் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறாராம் அண்ணாமலை.
ஆகவே அதிமுக கூட்டணியில், பாஜக தமது உண்மையான வாக்கு பலத்தின் அடிப்படையில் தொகுதி பங்கீட்டை பெற்றால், கூட்டணி ஆட்சி என்பது நிச்சயம். அதாவது, இரண்டு சட்டசபை தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டால், ஒரு சட்டசபை தொகுதியில், பாஜக போட்டியிட வேண்டும் என அண்ணாமலை யோசனை கூறி இருக்கிறாராம்.
இது நடந்தால் கூட்டணி ஆட்சி உறுதி
அதாவது, அதிமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையில் சரிபாதியை, பாஜக கேட்டுப் பெற வேண்டும். அதிமுக 140 தொகுதிகளில் போட்டியிட்டால் பாஜக 70 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். அப்படி செய்தால் தான், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி ஏற்படும் என வலியுறுத்தி உள்ளாராம் அண்ணாமலை.
அப்படி நடந்தால், அடுத்து வரும் 2029 லோக்சபா தேர்தலில், நிச்சயமாக தமிழ்நாட்டில் 30 தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற முடியும் என அந்தக் கடிதத்தில் அண்ணாமலை அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications