தங்கம் 70% வரை சரிவு.. ஒரே மாதத்தில் ஏற்பட்ட மிக பெரிய மாற்றம்.. இனியும் தொடருமாம்!
டெல்லி: இந்தியாவில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல, அது ஒரு முக்கியமான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், சமீபகாலமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் தங்கத்தின் அளவு பெருமளவு குறைந்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு என்ன காரணம்.. இதன் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்!
இந்தியாவில் பொதுமக்கள் எப்போதுமே முதலீட்டிற்காகத் தங்கத்தைத் தான் வாங்குவார்கள். நீண்ட கால நோக்கில் தங்கம் விலை எப்போதுமே சரியாது என்பதால் பொதுமக்கள் தங்கள் சேமிப்பைத் தங்கமாக வாங்கி வைப்பார்கள். இதனால் ஒவ்வொரு ஆண்டும் தங்கத்திற்கான இறக்குமதி தொடர்ந்து அதிகரித்தே வந்துள்ளது. ஆனால், இப்போது ஒரு திடீர் மாற்றம் நடந்துள்ளது.

70% சரிவு
அதாவது முன்பு இந்தியாவில் ஒரு மாதத்திற்குச் சராசரியாக 70 முதல் 100 டன்கள் வரை தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது இது 25 முதல் 30 டன்களாக சரிந்துள்ளது. அதாவது ஒரே மாதத்தில் சுமார் 70% வரை தங்க இறக்குமதி சரிந்துள்ளது. 2026 ஏப்ரல் மாதத்தில் 5.63 பில்லியன் டாலராக இருந்த தங்க இறக்குமதி, மே மாதத்தில் 3.42 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.. அதாவது ஒரே மாதத்தில் இறக்குமதி மதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது.
காரணம் என்ன
தங்க இறக்குமதி இந்தளவுக்குக் குறைய மத்திய அரசு அதன் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது.. அதாவது முன்பு இறக்குமதி வரி 6 சதவீதமாக இருந்த நிலையில், அது இப்போது 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பைப் பாதுகாக்கவும், நாட்டின் இறக்குமதிச் செலவைக் குறைக்கவும் இந்த வரி உயர்வு அமல்படுத்தப்பட்டது. இந்த வரி உயர்வு எதிர்பார்த்த பலனைத் தந்து கொண்டிருக்கிறது என்றும் இதனாலேயே தங்க இறக்குமதி குறைந்துள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.
தங்கத்தின் விலை ஓரளவுக்குக் குறைந்தாலும் கூட பெரியளவில் குறையவில்லை. இப்படி விலை அதிகமாக இருப்பதாலும், பொதுமக்கள் நகை வாங்குவதைக் குறைத்துள்ளனர். நகைக்கான தேவை குறைந்ததும் இறக்குமதி சரிவுக்கு ஒரு காரணமாக இருக்கிறது.
மறுசுழற்சி
தற்போது உலகளவில் பழைய தங்கத்தை உருக்கிப் புதிய நகைகளாக மாற்றும் மறுசுழற்சி முறை அதிகரித்துள்ளது. பொருளாதார ரீதியாக நிலையான நாடுகளில் கூட, மக்கள் தங்களிடம் உள்ள பழைய நகைகளை விற்று அல்லது மாற்றி புதிய தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர். இதனால் புதிய தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் குறைந்துள்ளது.
இந்தியாவில் தங்கம் இறக்குமதி செய்ய சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கும். கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல், இந்த நிறுவனங்களுக்கான இறக்குமதி உரிமம் புதுப்பிக்கப்படவில்லை. இதன் காரணமாக, இந்த நிறுவனங்கள் வழியாக வரும் தங்கத்தின் அளவு குறைந்து, ஒட்டுமொத்த இறக்குமதி சரிவுக்கு வழிவகுத்துள்ளது.
நாட்டிற்கு நல்லது!
இந்தியாவின் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, அதிகப்படியான தங்க இறக்குமதி என்பது நாட்டின் பணமதிப்பைப் பாதிக்கக்கூடும். தற்போது இறக்குமதி வரி உயர்வு மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களால் தங்கம் இறக்குமதி குறைந்திருப்பது, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications