“நற்பணி மன்றம்” தொடங்கி கொடியை வெளியிட்ட ஆதரவாளர்கள்.. அண்ணாமலை கொடுத்த பரபரப்பு விளக்கம்
சென்னை: திருநெல்வேலியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆதரவாளர்கள் அண்ணாமலை நற்பணி மன்றம் என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கி, அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்தச் செய்தி வெளியானதை அடுத்து, அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், "இன்றைய தினம், திருநெல்வேலியில், எனது பெயரில் நற்பணி மன்றம் அமைத்து, கொடி அறிமுகம் செய்துள்ளதாக, ஊடகங்களில் வந்த செய்தி கண்டேன். நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன். எனினும், இதுபோன்ற அமைப்புகள், கொடி உள்ளிட்டவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை." என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "எனவே, தயவுசெய்து, என் பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் இது போன்ற செயல்பாடுகளை உடனடியாகக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். வருங்காலத்திலும், இது போன்ற செயல்பாடுகளைத் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்." என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"சுவர் இருந்தால்தான் சித்திரம். எனவே, அனைவரும் முதலில், உங்கள் வாழ்க்கைக்கு, உங்கள் குடும்பத்தினர் நலனை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் அன்பிற்கும், ஆதரவுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்" என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த வேண்டுகோள் மூலம், தனது பெயரில் தனிப்பட்ட அமைப்புகளை உருவாக்குவதை அவர் விரும்பவில்லை என்பதை அண்ணாமலை தெளிவுபடுத்தியுள்ளார். தனது ஆதரவாளர்கள் தனிப்பட்ட நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பதவியேற்றதற்கு பின்னர் அக்கட்சிக்கு கவனம் கிடைத்தது. 2024 மக்களவைத் தேர்தலில் அண்ணாமலை தலைமையில் தேர்தலை சந்தித்த பாஜக எந்த தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டாலும் குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை பெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டி பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு நயினார் நாகேந்திரன் தலைவராக கொண்டு வரப்பட்டதாக பேச்சுகள் எழுந்தன.
அண்ணாமலையிடம் இருந்து தலைவர் பதவி பறிக்கப்பட்டது அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கிடையே அண்ணாமலை விரைவில் தனி கட்சி தொடங்குவார் என்றும் தகவல்கள் பரவத் தொடங்கின. ஆனால் அப்படியான விஷயங்களை மறுத்தார் அண்ணாமலை. இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் அவரது பெயரில் நற்பணி மன்றம் தொடங்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications