ராகுல் பிரச்சாரத்தில் செல்வப்பெருந்தகைக்கு அழைப்பில்லை! ஐடி ரெய்டுனு நாடகம்! அண்ணாமலை விமர்சனம்
சென்னை: ராகுல் காந்தியின் பிரச்சாரத்திற்கு செல்வப்பெருந்தகைக்கு அழைப்பில்லாததை மறைக்க தனது வீட்டில் வருமான வரித் துறை சோதனை என பொய் சொல்லி சமாளித்ததாகவும், அப்படியொரு சோதனையே நடக்கவில்லை என வருமான வரித் துறை விளக்கம் அளித்ததன் மூலம் அவர் நாடகமாடியது தெள்ளத்தெளிவாக தெரிவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழகத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தியின் ஆங்கில உரையைத் தமிழில் மொழிபெயர்த்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, ராகுல்காந்தி பேசியதற்கு சற்றும் தொடர்பில்லாமல், தன் மனதில் தோன்றியதை எல்லாம் அடித்து விட்ட உண்மை, இன்றுதான் ராகுல் காந்திக்குத் தெரிந்திருக்கிறது போலும்.

அதனால் செல்வப்பெருந்தகையை இனிமேல் தனது கூட்டத்தின் பக்கமே விடாதீர்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார் என்று தெரிகிறது. இதனால் ராகுல் காந்தியின் இன்றைய கூட்டத்திற்கு தனக்கு அழைப்பில்லை என்ற உண்மை வெளிவந்தால், இன்னும் அசிங்கமாகிவிடும் என்ற பதற்றத்தில், செல்வப்பெருந்தகை, இன்று காலை, தனது வீட்டில் வருமானவரி சோதனை நடப்பதாகவும், தன்னை வீட்டிற்குள்ளேயே சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும் ஒரு நாடகமாடினார்.
இதனை அடுத்து, வழக்கம்போல, சினிமா வசனங்கள் பேசி, முதலமைச்சர் ஸ்டாலினும் பொங்கல் வைக்க, தற்போது, சோதனை நடந்ததாக செல்வப்பெருந்தகை கூறியது முழுப் பொய் என்று, வருமான வரித்துறை தெளிவுபடுத்தியிருக்கிறது. மேலும், தன்னை வீட்டுக்குள்ளே முடக்கி வைத்ததாகக் கூறிய செல்வப்பெருந்தகை, வெளியே வந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவதிலிருந்து, அவர் கூறியது பொய் என்பது உறுதியாகியிருக்கிறது.
பள்ளி செல்லும் குழந்தைகள் போல ஒரு சாக்கு சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார் செல்வப்பெருந்தகை. அவரது நகைச்சுவையை நம்பி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் பொங்கல் வைத்திருப்பதுதான் உச்சகட்ட நகைச்சுவை. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், அடிப்படையான விஷயங்களைக் கூட சரிபார்க்காமல் வடக்கு, தெற்கு என்று வசனம் பேசுவது, அவரது தேர்தல் தோல்வி பயத்தைக் காட்டுகிறது.
இந்த உதவாக்கரை கூட்டணி, தமிழக மக்களை எத்தனை ஏமாளிகள் என்று எண்ணினால், இப்படி ஒரு பொய்யை துணிந்து சொல்வார்கள்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செல்வப்பெருந்தகையின் வீடு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது பூர்வீக வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்துவதாக செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் ராகுல் காந்தி தென் தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் வேளையில் தன்னை வீட்டிலேயே அதிகாரிகள் சிறை பிடித்து வைத்துள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார். இந்த செயலுக்கு முதல்வரும் கண்டித்திருந்தார்.
இந்த நிலையில் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித் துறை ரெய்டு நடக்கவே இல்லை என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வருமான வரித் துறை கூறியிருப்பதாவது: செல்வப்பெருந்தகை சொல்வது போல் அவர் வீட்டில் எந்த ரெய்டும் நடத்தவில்லை. அது போல் ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு செல்லவிடாமல் அவரை தடுப்பதாக கூறியதும் பொய் என விளக்கமளித்துள்ளது.
இந்த நிலையில்தான் ராகுல் காந்தியின் ஆங்கில பேச்சை தவறாக செல்வப்பெருந்தகை மொழிபெயர்த்திருப்பது குறித்து ட்ரோல் செய்யப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications