தீவிரமடையும் போராட்டம்.. “ஆசிரியர்கள் வாழ்க்கையில் விளையாட வேண்டாம்!” அண்ணாமலை வலியுறுத்தல்
சென்னை: ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று கோரி இடை நிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், எழுத்தறிவிக்கும் ஆசிரியப் பெருமக்கள் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
போராட்டம் ஏன்?: கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 31ம் வரை நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு, ரூ.8,370 அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் அதே ஆண்டில் ஜூன் மாதம் 1ம் தேதி, அதாவது ஒரு நாள் இடைவெளியில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு ரூ.5,200 அடிப்படை சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டது. இதுதான் போராட்டத்திற்கு காரணம். இந்த ஊதிய முரண்பாட்டால் சுமார் 25 ஆண்டுகளாக தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆசியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கோரிக்கை என்ன?: இந்த ஊதிய முரண்பாட்டை எதிர்த்து கடந்த அதிமுக ஆட்சி காலத்திலேயே போராட்டங்கள் தொடங்கிவிட்டன. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், போராடும் ஆசிரியர்களை சந்தித்து போராட்டங்களுக்கு ஆதரவளித்தார். அதேபோல, தேர்தல் அறிக்கையில் 311வது வாக்குறுதியாக, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என்று அறிவித்திருந்தார். இதனை நிறைவேற்ற வேண்டும் என்பதே ஆசிரியர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
அண்ணாமலை: இந்நிலையில், போராடும் ஆசிரியர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் 1க்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, அதற்கு முன்பாகப் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களை விட அடிப்படை ஊதியம் ரூ.3,170 குறைவாக வழங்கப்படுவதை எதிர்த்து, சம வேலைக்கு சம ஊதியம் கோரி பல ஆண்டுகளாக தமிழகப் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.
எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்றிருந்த திமுக, தனது 2021 தேர்தல் வாக்குறுதி எண் 311ல், இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று போலி வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 33 மாதங்கள் கடந்தும், அது குறித்த எந்தக் கவலையும் இல்லாமல், ஆசிரியப் பெருமக்களின் தொடர் கோரிக்கைகளையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம், கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் எடுப்போம் என்று வாக்குறுதி அளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அதன்பிறகு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்.
வலியுறுத்தல்: ஆசிரியப் பெருமக்களுக்கு திமுக இழைத்துள்ள நம்பிக்கை துரோகத்தைக் கண்டித்தும், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 10,000 ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக, ஆசிரியப் பெருமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும் என்றும், எழுத்தறிவிக்கும் ஆசிரியப் பெருமக்கள் வாழ்க்கையிலும், மாணவ மாணவியரின் கல்வியிலும் விளையாட வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications