விரதம் ஓவர்! “நயினார் நாகேந்திரன் சொன்ன வார்த்தையால் மீண்டும் காலணி அணிய தொடங்கியுள்ளேன்”: அண்ணாமலை
சென்னை: "தேசிய ஜனநாயகக் கூட்டணி, திமுக ஆட்சியை நிச்சயம் அகற்றும் என்ற உறுதியுடன், காலணி அணியத் தொடங்கியிருக்கிறேன்" என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை தமது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும், மக்கள் விரோத தி.மு.க ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற உறுதியோடு, கடந்த சுமார் நான்கு மாதங்களாக, நான் உட்பட பா.ஜ.க சகோதர சகோதரிகள் பலரும், காலணி அணியாமல் விரதத்தை மேற்கொண்டு வருகிறோம்.

நேற்றைய தினம், தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் அன்பு அறிவுறுத்தலை ஏற்று, தமிழகத்தில், வரும் சட்டசபை தேர்தலில், நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி, தி.மு.க ஆட்சியை நிச்சயம் அகற்றும் என்ற உறுதியுடன், காலணி அணியத் தொடங்கியிருக்கிறேன்.
என்னுடன் விரதம் மேற்கொண்டு வந்த பா.ஜ.க சகோதர சகோதரிகள், வரும் நாட்களில், தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கல்லையும் முள்ளையும் கடந்து பயணப்பட்டு, தங்கள் கடின உழைப்பை வழங்க வேண்டிய தேவை இருக்கிறது.
அண்ணன் நயினார் நாகேந்திரனின் அன்பு அறிவுறுத்தலை ஏற்று, அனைவரும் தங்கள் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று, உங்கள் அன்பு சகோதரனாகக் கேட்டுக் கொள்கிறேன்.வாழ்க தமிழ். வளர்க பாரதம்." எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த சம்பவம் குறித்து அப்போதைய பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை தமிழக அரசை சரமாரியாக விமர்சித்திருந்தார். "தமிழக அரசு பெண்களுக்கும், மாணவிகளுக்கும் போதுமான அளவுக்கு பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிவிட்டது. இதைக் கண்டித்து போராட்டம் நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
எனவே, நாங்கள் நூதன முறையில் எதிர்ப்பை பதிவு செய்கிறோம். இந்த அரசின் பொறுப்பற்ற தனத்திற்கு எதிராக என்னை நானே சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தை முன்னெடுக்க இருக்கிறேன். திமுகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றும் வரை நான் காலில் செருப்பு அணிய மாட்டேன். இது எனது சபதம்" என்று கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி அறிவித்திருந்தார். அதேபோல, கோவையில் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். அவர் செருப்பு அணியாமலும் இருந்து வந்தார்.
இந்நிலையில், பாஜகவின் புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நேற்று அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அண்ணாமலை நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது நயினார் அண்ணாமலைக்கு செருப்பை எடுத்துக் கொடுத்து சபதத்தை முடித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். வரும் 2026 மே மாதம் ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி என்பதால் அண்ணாமலை இன்றே காலணி அணிந்து கொள்ளலாம் என்று கூறினார். இதையடுத்து அண்ணாமலையும் செருப்பு அணிந்து விரதத்தை முடித்துக்கொண்டார்.












Click it and Unblock the Notifications