காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக்
சென்னை: வார்த்தைக்கு வார்த்தை, ஆருயிர் தம்பி அண்ணாமலை என்று பேசி வந்த நயினார் நாகேந்திரன், தற்போது அண்ணாமலை கட்சியை விட்டு விலகியதால் பெருசா எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக அரசியல் களம் தற்போது மாறியிருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் வெற்றி, இளைஞர்களிடையே புதிய மாற்றம் தேவை என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதை உணர்த்தியிருக்கிறது. மட்டுமல்லாது திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்று வேண்டும் என்பதையும், இளம் அரசியல் தலைவர்களின் தேவையையும் இந்த வெற்றி உணர்த்தியிருக்கிறது. இப்படி இருக்கையில்தான் தற்போது பாஜகவிலிலிருந்து விலகியிருக்கிறார் அண்ணாமலை.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 2 நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருக்கும் நிலையில், தன்னுடைய ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதனை கட்சியின் தேசிய தலைமை ஏற்றுக்கொண்டிருக்கிறது.
முன்னதாக நேற்று அண்ணாமலைக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்திருந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.. அண்ணாமலையை தன்னுடைய ஆருயிர் தம்பி என்று கூறியிருந்தார். தற்போது அண்ணாமலை கட்சியை விட்டு விலகியிருக்கும் நிலையில், அவர் விலகியதால் பெருசா எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியிருக்கிறார்.
அவர் பேசியதாவது, "அண்ணாமலை கடந்த 18 மாதங்களாக அதிருப்தியில் இருப்பதாக நீங்கள்(பத்திரிகையாளர்கள்) கூறுகிறீர்கள். அது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்." என்று கூறியிருக்கிறார்.
அதேபோல அண்ணாமலை கட்சியை விட்டு போனதால் அது பாஜகவுக்கு இழப்பு என்று நினைக்கிறீர்களா? என்கிற கேள்விக்கு, "பாஜக இன்று நேற்று தொடங்கப்பட்ட கட்சி கிடையாது. இது சித்தாந்தத்தின் அடிப்படையில் இயங்கும் கட்சி. எனவே எந்த இழப்பும் இல்லை" என்று கூறியிருக்கிறார்.
மேலும் அண்ணாமலை தனி கட்சி தொடங்குவது குறித்து பேசிய நயினார் நாகேந்திரன், இது ஜனநாயக நாடு என்றும், யார் வேண்டுமானாலும் கட்சியை தொடங்கலாம் என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications