புட்டு புட்டு வெச்ச பாண்டியன்.. அண்ணாமலையே எதிர்பார்க்கல.. தமிழக பாஜகவில் தீண்டாமை? அதிரும் கமலாலயம்
சென்னை: தேர்தலுக்கு தமிழக பாஜக மும்முரமாகி உள்ள நிலையில், திடீரென அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி, கமலாலயத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழக பாஜகவை பொறுத்தவரை, எம்பி தேர்தலுக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே தயாராகி வருகிறது.. அந்தவகையில் தென்மண்டலங்களிலும் காலூன்ற பாஜக முயன்று கொண்டிருக்கிறது.

அதனால்தான், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா போன்றோரின் ஆதரவையும் தக்க வைத்து வருவதாக தெரிகிறது. அதுமட்டுமல்ல, முக்குலத்தோர் அதிருப்தியை எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ளதால், தென்மண்டல வாக்குகளை கணிசமாக அள்ளுவதற்காகவே, தினகரன், ஓபிஎஸ் தயவும் தேவையாக இருக்கிறது.
வியூகம்: ஆனால், பாஜகவின் இந்த வியூகத்தையும் அதிமுக உடைக்க வியூகம் வகுத்து வருகிறதாம்.. இதற்காகவே, தென் மாவட்டங்களில் கணிசமாக உள்ள பிற சமூகத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். குறிப்பாக, தேவேந்திர குல வேளாளர், நாடார் சமூக மக்களின் வாக்குகளை பெறும் முயற்சியில் எடப்பாடி தரப்பு இறங்கி உள்ளதாக சொல்கிறார்கள்.
இதன்மூலம், தென்மண்டலங்களில் இழந்த அதிருப்தியை, மீண்டும் சரிக்கட்டி வாக்குகளாக அள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி நம்புகிறாராம். ஆனால், மாநில தலைவர் அண்ணாமலையோ, எடப்பாடியைவிட வேகம் காட்டி வருகிறார்.
தமிழக பாஜக: குறிப்பாக, ஒவ்வொரு ஜாதியிலிருந்தும் முக்கியமான பலரையும் கட்சிக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கி உள்ளார்.. இதில் ஓரளவும் பாஜகவுக்கு வெற்றி கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் திடீரென ஒரு அதிர்ச்சி தகவல் அக்கட்சியிலிருந்து வெளியாகி உள்ளது.
பாஜகவின் பட்டியல் அணியிலிருந்து முக்கியமான தலைவர் ராஜினாமா செய்திருக்கிறார்.. பாஜகவின் பட்டியல் அணி மாநில துணைத்தலைவராக இருப்பவர் பாண்டியன்... இவர் தற்போது கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து கட்சியில் நிலவும் சாதி பாகுபாடு காரணமாக, கட்சியில் இருந்து விலகிக் கொள்வதாக சொல்லி உள்ளார்.. அத்துடன், தன்னுடைய விலகல் கடிதத்தையும் தந்துள்ளார்..
நவீன தீண்டாமை: அந்த கடிதத்தில், பாஜகவில் ஜாதிய பாகுபாடும் நவீன தீண்டாமையும் இருப்பதாக பாண்டியன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.. மேலும், பெரும்பாலான மாவட்ட தலைவர்கள் பட்டியல் அணி நிர்வாகிகளை மதிப்பதில்லை என்றும் வருத்தத்தை பாண்டியன் பதிவு செய்துள்ளார்.
குடியரசுத் தலைவரை நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு அழைக்காதது தனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் கருத்து தெரிவித்து, தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கியிருக்கிறார்.
பாஜகவில் மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரே, தற்போது விலகியுள்ளது பெரும் பரபரப்பை தந்துவருகிறது. அத்துடன் விலகலுக்கான காரணமும், அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அதிரும் பாஜக: பதவியை ராஜினாமா செய்திருக்கும் பாண்டியன், வேறு எந்த கட்சியிலிருந்து சேரப்போகிறாரா? என்று தெரியவில்லை.. ஆனால், பாஜகவில் நடக்கும் இந்த நிகழ்வுகளை அதிமுக மட்டுமல்லாமல், திமுகவும் உற்றுகவனித்து வருகிறது.. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற விலகல்கள் பல கட்சிகளில் அதிகமாகக்கூடும் என்றாலும், இன்றைய விலகல் பாஜகவை அதிர வைத்துள்ளதாகவே தெரிகிறது.












Click it and Unblock the Notifications